உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
49. முல்லை நிலங் கடந்தது
 
           தெய்வப் பேர்யாழ் கைவயி னீக்கி
          வீக்குறு புரோசை வாய்ப்பொற் பந்தத்து
          யாப்புற வமைத்துக் காப்புறு தொழிலின்
          நீர்நிறைக் கொளீஇய தாமரைக் கம்மத்துக்
    15     கூரிலைக் கொலைவாள் வார்மயிர் வட்டத்துச்
          சேடக வரணமொ டீடுபட விரைஇ
          இறைமகன் கேட்ப விற்றென வுரைக்கும்
 
                 (இதுவுமது)

                  11 - 17: தெய்வ..........உரைக்கும்

 
(பொழிப்புரை) தன் கையிலிருந்த தெய்வத்தன்மையுடைய கோடவதி என்னும் பேரியாழை அகற்றிக் கட்டமைந்த புரோசைக் கயிற்றின் கண் அமைந்த பொற்பந்தம் என்னும் உறுப்பின்கண் கட்டுண்ணும் படி அமைத்து வைத்துப் பின்னர்க் காவல் செய்யும் தொழிலின்கண் விரைந்து ஈடுபடும் பொருட்டு நீர் நிறைதல் கொண்ட தாமரையிதழ் போன்ற தொழிலமைந்த கூர்த்த இலையினையுடைய கொலைத் தொழிற்குரிய வாளையும், நெடிய மயிர் சீவாது போர்த்த வட்டமான கிடுகுப் படையினையும் கைக்கொண்டு தன் இறைமகனாகிய உதயண குமரன் கேட்கும்படி பின்னரும் அந் நகரத்தின் றன்மை யித்தகையது என்று கூறாநிற்பன் என்க.
 
(விளக்கம்) பேரியாழ் - கோடவதி. பொற்பந்தம் - புரோசையில் ஓருறுப்பு. யாப்புற - கட்டுண்ண. தொழிலின் (13) ஈடுபட (16) என இயைக்க. விரைஇ - கலந்து; விரைந்துமாம்.