உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
49. முல்லை நிலங் கடந்தது
 
           இடத்திட் டேகுது மெனினே யெங்கும்
    25    முடத்தாட் டாழை மொய்த்தெழு முழுச்சிறைத்
          தோட்டமும் படுவுங் கோட்டகக் கோடும்
          பிரம்பெழு பெரும்பா ரடைந்துமிகைச் செற்றிச்
          செதும்புபரந் தெங்குஞ் சேற்றிழுக் குடைத்தாய்
          வாய்க்கா னிறைந்த போக்கரும் பணையொடு
    30    வரம்பிடை விலங்கி வழங்குதற் கரிதாய்
          நிரம்பாச் செலவி னீத்தருஞ் சிறுநெறி
          நலத்தகு புகழோய் நடத்தற் காகாது
 
                (இதுவுமது)

                24 - 32: எங்கும்..........ஆகாது

 
(பொழிப்புரை) இவ்வலப் பக்கம் யாண்டும் முடம்பட்ட அடியை யுடைய தாழைகள் செறிந்து வளர்கின்ற முழுவேலிகளையுடைய தோட்டங்களும், மடுக்களும் கோட்டகக் கரைகளும் உடையதாய்ப் பிரம்பு வளர்கின்றமையாலே பெரிய பாறைகள் பட்டுச் செறிந்து பொருக்குகள் பரவி யாண்டும் சேற்றின் வழுக்கலுடையதாய் வாய்க்கால் களும் நிறைந்து செல்லுதற்கரிய மூங்கிற் புதர்களோடு இடையிடையே வரம்புகள் குறுக்கிடப்பட்டுச், செல்லுதற் கரியதாய், முற்றுப்பெறாத போக் குடைய கடத்தற்கரிய சிறிய வழிகளையுடைத்தாகலின் நலந்தக்கிருக்கின்ற புகழையுடையோய்! இந்நெறி நம்பிடி நடத்தற்கியலாது காண்! என்க.
 
(விளக்கம்) முடம் - வளைந்த. சிறை - வேலி. படு - மடு, கோட்டகம்; நன்செய்ப் பரப்பு. கோடு - கரை. பிரம்பின் தூரடர்ந்த மையாலே பாறை யாகிய மேட்டின்மேலே என்க. பார் - பாறை. செதும்பு - பொருக்கு. வாய்க்கால் - கால்வாய். பணை - மூங்கில். இடைவிலங்கி - குறுக்கிட்டு. நிரம்பா - கடைபோகாத. செலவு - செல்நெறி: ஆகுபெயர். நீத்தரும் - கடத்தலரிய..