உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
49. முல்லை நிலங் கடந்தது
 
           கதழ்வொடு கடக்குங் காலை யவ்வழி
    40    ஒருபாற் படாதோ ருள்ளம் போல
          இருபாற் பட்ட வியற்கைத் தாகிய
          நெறிவயி னேதங் குறிவயிற் காட்டி
          வடுவி னண்பின் வயந்தக னுரைக்கும்
          இடுகன் முதலன விடவயிற் கிடந்த
    45    தின்னாப் பேர்தே ரியற்கைத் தெண்மதி
          ஒன்னா மன்னற் குற்றது செய்யும்
          யாப்பி லாளர் காப்பிற் றாகி
          ஏற்றமு மிழிவு மிடையிடைப் பல்கி
          ஊன நாடு முளவழிச் சில்கி
    50    நீரு நிழலு நீங்கிற் றாகி
          வெவ்விளை யாள ரல்லது விழுமிய
          செவ்வினை யாளர் சேரார் நம்பதிக்
          கணித்து மன்றது மணிப்பூண் மார்ப
 
                (வயந்தகன் கூறல்)

                39 - 53: அவ்வழி..........மார்ப

 
(பொழிப்புரை) குற்றமற்ற நண்பனாகிய வயந்தகன் மீண்டும் உதயணனை நோக்கி, அந்த வழிதானும் பின்னர் ஓரிடத்தே நிலை பெறாத வேசையர் நெஞ்சம் போன்று இரண்டாகக் கவர்த்துச் செல் லும் இயல்புடையதாகிய வழிக்குற்றத்தைக் குறிப்பாலுணர்த்திக் கூறு வான் -- "மணியணிகலன் புரளும் மார்பை யுடையோய்! இவ்விரு நெறிகளுள் வைத்து, கொண்டு வந்து குவித்த கற்கள் முதலியவற் றோடு இடப்பக்கத்தே கிடந்தவழி ஆறலைத்தலாகிய இன்னாமையைச் செய்வோர் வழிப்போக்கர் வருகின்றனரோ? என்று ஆராய்கின்ற தன்மையுடையதாகும். இதனை நினைந்து பார்த்தருள்க! மேலும் நம் பகைமன்னனாகிய பிரச்சோதனனுக்குப் பொருந்திய செயல்களையே செய்யாநின்ற நம்மோடு எவ்வாற்றானும் பொருத்தமில்லா தவராகிய மறவர்களுடைய காவலையுடையதாகி மேடும் பள்ளமும் இடையிடையே மலிந்து சிறுமையுடைய நாடுகளையும் உடையதாய் அவற்றின் உளவாகிய வழிகளும் குறைந்து நீரும் நிழலும் அற்றதாகலின் இதன்கண் தீவினை செய்யும் மாக்களையன்றிச் சிறந்த நல்வினையாளர் என்றும் எய்தார்; மேலும் இவ்வழி நம் நாட்டிற்கு அணித்தாய வழியுமன்று,"
 
(விளக்கம்) இருகல் - கொணர்ந்திட்ட கல். இன்னாப் பேர் - இன்னாமை செய்வோர். எண் - நினைத்துப் பார். மதி: முன்னிலை யசை ஒன்னா மன்னன் - பிரச்சோதனன். யாப்பு - பொருத்தம். ஏற்றம் - மேடு. இழிவு - பள்ளம். ஊனம் - சிறுமையுடைய. ஊன நாடுமுடைத்தாய் என்க. வெவ்வினையாளர் என்பதற்கு முற்பிறப்பிற் றீவினை செய்தோர் எனினும் செவ்வினையாளர் என்பதற்கு முற்பிறப் பில் நல்வினை செய்தோர் எனினுமாம்.