உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
49. முல்லை நிலங் கடந்தது
 
           ஓட்டுக வல்விரைந் தென்றலி னுதயணன்
          காட்டுப் பெருவழி கடத்தன் மேவான்
    75    நாட்டுப் பெருவழி நணுகக் காட்டிப்
          பொருள்வயிற் பிரிவோர் வரவெதி ரேற்கும்
          கற்புடை மாதரிற் கதுமென வுரறி
          முற்றுநீர் வையக முழுது முவப்பக்
          கருவி மாமழை பருவமொ டெதிரப்
    80    பரவைப் பௌவம் பருகுபு நிமிர்ந்து
          கொண்மூ விதானந் தண்ணிதிற் கோலித்
          திருவிற் றாம முருவுபட நாற்றி
          விடுசுடர் மின்னொளி விளக்க மாட்டி
 
                (உதயணன் செயல்)

               73 - 83: உதயணன்..........மாட்டி

 
(பொழிப்புரை) அது கேட்ட உதயணன் இடவயிற் கிடந்த காட்டுப் பெருவழியே சென்று கடத்தலை விரும்பானாகி அங்கிருந்து நருமதை யாறு வரையிற் கிடந்த அந்த வலத்திற் கிடந்த நாட்டகப் பெருவழியையே தேர்ந்து கொண்டு பிடியானை அவ் வழியை நண்ணும்படி செலுத்த மின்னல் முதலிய தொகுதிகளையுடைய கரிய முகில்கள் பரப்புடைய கடலின்கட் சென்று நீரைப் பருகி வானத்தே உயர்ந்தெழுந்து ஞெரேலென முழங்கி இடித்துப் பொருள் தேடற்பொருட்டுத் தம்மைப் பிரிந்து போன தத்தம் கணவன்மார் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்ற கற்புடைய குல மகளிர் அவர் வருகை கண்டு மகிழுதல் போன்று கடல் சூழ்ந்த இவ்வுலகத்தே வாழும் உயிரினங்கள் அனைத்தும் மகிழும்படி தமக்குரிய கார்ப் பருவத்தோடே வந்து முகிற்குழாமாகிய மேற்கட்டியைக் குளிர்ச்சியுடைத்தாகக் கட்டி வளைத்து இந்திர வில்லாகிய மாலையை அழகுறத் தூங்கவிட்டு யாண்டும் ஒளி வீசாநின்ற மின்னலாகிய ஒளி விளக்குகளை மாட்டியென்க.
 
(விளக்கம்) காட்டி - காட்ட; செலுத்தவென்க. கற்பு - இருத்தல் என்னும் உரிப்பொருள் இது முல்லை நிலத்திற்கும் கார் காலத்திற்கும் உரிய ஒழுக்கம். இதனால் இத்திணைக்கு உரிப்பொருள் கூறினமையுணர்க. மாதரின் உவப்ப எனவும். நிமிர்ந்து கதுமென உரறி எனவும் இயைத்துக் கொள்க. வையகம்: ஆகுபெயர். கருவி - தொகுதி. மழை - முகில். முகில் தம்மையே விதானமாகக் கோலி என்பது கருத்து. கொண்மூ - முகில். திருவில் - வானவில். உருவு - அழகு.