உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
50. குறிஞ்சிநிலங் கடந்தது
 
           பொதிக்க ணிறாஅற் பூம்புறம் புதைஇ
          மதிக்கண் மறைந்த மாசுண மான
          மணிவரை மருங்கி னணிபெற வொழுகி
          முதிர்பூங் காவி னுதிர்தா தளைஇ
          மலைவாழ் குறவர் மகளிர் குடையும்
     40   சுனைவாய் நிறைக்குஞ் சூருடைச் சிலம்பிற்
          பாடுபெயர்த் தறியாப் பக்கம் பயின்ற
          கோடுயர் நிவப்பிற் குளிர்மலை யோங்கி
 
                    (இதுவுமது)
           34 - 42 : பாய்தலிற்..........ஓங்கி்
 
(பொழிப்புரை) தேன் பொதிந்த கண்களையுடைய தேனிறால் முதிர்ந்து மேற்புறமெங்கும் நீலநிற ஓரி பாய்தலாலே தாமே கிழிந்து அழகிய தம்புறம் மறைக்கப்பட்டுத் திங்கள் மண்டிலத்தை மறைத்த பெரிய பாம்பு போன்று மணிகளையுடைய மலையின் பக்கத்தே ஒழுகியூர்ந்து முதிர்ந்த மலர்களையுடைய சோலையில் உதிர்ந்த பூக்களை அளாவிக் கொண்டு சென்று மலையிடத்தே வாழ்கின்ற குறமகளிர் நீராடா நின்ற சுனைகளை வாயளவும் நிறைத்தற்கிடனான தீண்டி வருத்தும் தெய்வங்களையுடைய பக்கமலைகளையும் ஓசை அகலுதலில்லாத பக்கங்கள் பொருந்திய குவடுகள் மிக்குயர்ந்த குளிர்ந்த மலைகள் உயர்ந்து நின்று என்க,
 
(விளக்கம்) ஓரி - ஒருவகை நிறம். இது தேனிறால் முதிர்ந்துழி உண்டாகும் நிறம். 'நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை நேமியிற் செல்லும் நெய்க்கண் இறாஅல்' (மலைபடுகடாம். 525 - 6) என்பதும் காண்க. முதிர்ந்து: ஓரி பாய்தலாலே தாமே கிழிந்தென்க. கண் - துளைகள். இறாஅல் - தேனடை. மதிக்கண் மறைந்த திங்களிடத்தை மறைத்த வென்க. மாசுணம் - பாம்பு. மான: உவமவுருபு. தாது - பூந்துகள். குடையும் - நீராடும். சூர் - தீண்டிவருத்தும் தெய்வம். பாடு - ஒலி. கோடு - உச்சி; குவடு.