உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
51 நருமதை கடந்தது
 
            மதிய முரைஞ்சு மால்வரைச் சென்னிப்
     5    பொதியவிழ் பூமரம் பொதுளிய சோலை
          அகலத் தெல்லையு மாழ்ச்சிய தந்தமும்
          உயர்பி னோக்கமு முணர்த்தற் காகா
          விஞ்சையம் பெருமலை நெஞ்சகம் பிளந்து
          கல்லுட் பிறந்த கழுவாக் கதிர்மணி
    10     மண்ணுட் பிறந்த மாசறு பசும்பொன்
          வேயுட் பிறந்த வாய்கதிர் முத்தம்
          வெதிரிற் பிறந்த பொதியவி ழருநெல்
          மருப்பினுட் பிறந்த மண்ணா முத்தம்
          வரையிற் பிறந்த வயிரமொடு வரன்றி
 
               (நருமதைப் பேரியாறு)

                4 - 14: மதியம்..........வரன்றி

 
(பொழிப்புரை) திங்கள் மண்டிலத்தைத் தீண்ட வுயர்ந்துள்ள பெரிய மலை உச்சியிலே அமைந்த கட்டவிழந்து மலர்ந்த மலர்களையுடைய மரங்கள் செறிந்த சோலைகளையுடைய பரப்பின் ஆழத்தின் முடிவும் உயர்ச்சியினது உயர்வெல்லையும் யாவரானும் கண்டு கூறுதற்கியலா விந்தமென்னும் மலையினது மார்பைப் பிளந்து கொண்டு ஆங்குக் கல்லினுள்ளே தோன்றிய அராவப் படாத முழு ஒளிமணிகளையும், மண்ணிற் றோற்றிய குற்றமற்ற பசிய பொன்னையும், வேய் மூங்கிலில் தோன்றிய அழகிய ஒளியுடைய முத்தையும், வெதிர் மூங்கிலிற் காய்த்த உமியவிழ்ந்த அரிய நெல்லும், யானை மருப்புகளிலே தோன்றிய கழுவாத முத்தும், மலையிற் றோன்றிய வயிரமும் ஆகிய இவ்வரும் பொருள்களை வரன்றிக் கொண்டென்க.
 
(விளக்கம்) உரைஞ்சும் - தேய்க்கும்; தீண்டும். சென்னி - உச்சி. பொதுளிய - செறிந்த. உயர்பினது உயர்ச்சியின் எல்லையும் என்க. விஞ்சையம் பெருமலை - விந்தமலை. வேய் வெதிர் என்பன மூங்கில் வகை. மருப்பு - யானை மருப்பும் கேழல் மருப்பும் என்க. வரை - மலை. நருமதை யாறு விந்தமலையை ஊடுருவி மணி முதலியவற்றை வரன்றி வருகின்ற தென்க.