உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
51 நருமதை கடந்தது
 
         
    15     நுரையுட் பிறந்த நொ......லாடை
          முடந்தாட் பலவின் குடம்புரை யமிழ்தமும்
          நெடுந்தாண் மாவி னெய்படு கனியும்
          கருந்தாள் வாழைப் பெருங்குலைப் பழனும்
          பெருந்தேன் றொடையலும் விரைந்துகொண் டளைஇ
    20    நறவஞ் சாரற் குறவர் பரீஇய
          ஐவன நெல்லுங் கைவளர் கரும்பும்
          கருந்தினைக் குரலும் பெருந்தினைப் பிறங்கலும்
          பாவை யிஞ்சியுங் கூவைச் சுண்ணமும்
          நாகத் தல்லியு மேலத் திணரும்
    25    கட்சா லேகமு முட்கா ழகிலும்
 
                (இதுவுமது)

               15- 25: நுரையுள்..........அகிலும்

 
(பொழிப்புரை) நுரையிற் றோன்றிய......லாடையும் முடம் பட்ட அடியையுடைய பலாவினது குடம் போன்ற இனிய கனியும், நீண்ட அடியினையுடைய மாமரத்தினது சாறுடைய கனிகளும், கரிய அடியினை யுடைய வாழையினது பெரிய குலையாகிய பழங்களும், பெரிய தேனிறா அல்களும், ஆகிய இவற்றையும் விரைந்து வாரிக் கலந்து கொண்டு குங்கும மரங்கள் மிக்க சாரலின் கண்ணே குறவர் அறுத்து வைத்த மலை நெல்லும் பக்கத்தே வளர்ந்துள்ள கரும்பும் கருந்தினையினது கதிரும் பெருந்தினை யினது குவியலும், இஞ்சிப் பாவையும் கூவைக் கிழங்கின் பொடியும் நாகப் பூவின் அகவிதழும் ஏலத்தின் மலர்க் கொத்தும் கணுவமைந்த சிறு தேக்கு மரமும், அகக்காழுடைய அகின் மரமும் என்க.
 
(விளக்கம்) 15 ஆம் அடியில் சொற்கள் சிதைந்தமையாற் பொருள் புலப்பாடில்லை, புரை : உவமவுருபு. அமிழ்தம் : உவமவாகு பெயர்; கனியென்க. நெய் - சாறு. தேன் தொடையல் - தேனடை. பலாக் கனி மாங்கனி வாழைக்கனி என்னும் முக்கனியையும் தேனோடு கலந்து கொணர்ந்தது என்னும் நயமுணர்க. நறவம் - குங்குமமரம். பரீஇய - அறுத்து வைத்த என்க. கருத்தினை பெருந்தினை என்பன தினை வகை கள். பிறங்கல் - குவியல். இஞ்சிக் கிழங்கைப் பாவையென்றல் மரபு. அல்லி - அகவிதழ், உட்காழ் - அகக்காழ்.