உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
51 நருமதை கடந்தது
 
           அணிக்குருக் கத்தியு மதிரலு மனுக்கி
    40    மணிச்சையு மயிலையு மௌவலு மயக்கி
          ஞாழலும் புன்னையும் வீழ நூக்கிக்
          குருந்துங் கொன்றையும் வருந்த வணக்கித்
          தடவும் பிடவுந் தாழச் சாய்த்து
          முளவு முருக்கு முருங்க வொற்றி
    45    மாவும் மருதும் வோறப் புய்த்துச்
          சேவுங் குரவுஞ் சினைபிளந் தளைந்து
          நறையு நாகமு முறைநடு முருக்கி
          வழையும் வாழையுங் கழையுங் கால்கீண்
          டாலு மரசுங் காலொடு துளக்கிப்
    50    புன்கு நாவலும் புரள வெற்றிக்
          கொங்கார் கோடலொடு கொய்யல் குழைஇ
          அனிச்சமு மசோகமு மடர வலைத்துப்
          பனிச்சையும் பயினும் பறியப் பாய்ந்து
          வள்ளியு மரலுந் தன்வழி வணக்கி
 
                (மரங்கள்)
          39 - 54: அணி...........வணக்கி
 
(பொழிப்புரை) அழகிய குருக்கத்திக் கொடிகளையும், மோசி மல்லிகைக் கொடிகளையும் வருத்தியும், மணிச்சிகை மரத்தையும் இருள் வாசியையும் நிலை கலக்கியும், ஞாழல் மரத்தையும் புன்னை மரத்தையும் வீழும்படி சாய்த்தும், குருந்த மரத்தையும் கொன்றை மரத்தையும் நலியும்படி வளைத்தும், தடா மரத்தையும் பிடா மரத்தை யும் தரையிற்றாழும்படி வீழ்த்தியும், முள்ளி மரத்தையும் முண்முருக்க மரத்தையும் அழியும்படி சாய்த்தும், மா மரத்தையும் மருத மரத்தையும் வேர் அற்றுப் போம்படி புய்த்தும், சேமரத்தையும் குராஅ மரத்தையும் கிளைகளைப் பிளந்து வாரிக்கொண்டும், நறை மரத்தையும் நாக மரத்தை யும் முறையே நடுவில் ஒடித்தும், வாழையையும் சுர புன்னையையும் மூங்கிலையும் வேர் பறித்தும், ஆல மரத்தையும் அரைய மரத்தையும் அடியோடு அசைத்தும் புன்க மரமும் நாவல் மரமும் புரளும்படி சாய்த்தும், மணம் நிரம்பிய காந்தளையும் கொய்யாவையும் குழைவித்தும், அனிச்ச மரத்தையும் அசோக மரத்தையும் நெருங்கும்படி அலைத்தும், பனிச்சை மரமும்பயின் மரமும் வேர்பறியும்படி பாய்ந்தும், வள்ளியும் மரலும் தன் வழியே சாயும்படி வளைத்தும் என்க.
 
(விளக்கம்) குருக்கத்தி - மாதவிக்கொடி. அதிரல் - மோசி மல்லிகை. மயிலை - இருள்வாசி. மௌவல் - முல்லை. தடவு - தடா. பிடவு பிடா. முளவு - முள்ளி மரம். சே - ஒரு மரம். கழை - மூங்கில். கோடல் - காந்தன். கொய்யல் - கொய்யா. அடர - ஒன்றோடொன்று நெருங்க என்க.