உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
48. மருதநிலங் கடந்தது
 
           அரநுதி யன்ன பரன்முரம் படுக்கத்துச்
          சுரமுத லடைந்த சூழகன் புரிசைப்
          பாழ்நில வாழ்நர் பரவினர் தூஉம்
          செந்தடிக் குருதிப் பைந்நிணக் கொழுங்குடர்
     10    எண்டிசை மருங்கினுங் கொண்டவ ரெடுத்த
          வேர்முத லூசல் வேம்பின் சினைதொறும்
          கண்பா டவிந்த கருமணிப் பிறங்கலொ
          டுழைக்கோ டணிந்து பீலி நாற்றிக்
          கழைக்கோற் றொடுத்த கதலிகை நுடங்கச்
 
                 (கொற்றவை கோயில்)
              6 - 14 :  அரநுதி..........நுடங்க
 
(பொழிப்புரை) வாளரத்தின் நுனியையொத்த கூர்மையுடைய பருக்கைக் கற்கள் பரவிய மேட்டு நிலத்தையும், பக்கமலைகளையும் உடைய பாலை நிலத்தின்கண் அமைந்த சூழ்ந்தகன்ற மதிலகத்தே அப்பாழ்பட்ட நிலத்திலே வாழும் மாக்கள் வாழ்த்தி வணங்காநின்றவர் பலியாகத் தூவிய சிவந்த தசையும் குருதியும் பசிய நிணமுடைய கொழுவிய குடரும் எட்டுத் திசைகளினும் உடைத்தாய் அவர்கள் வேம்பின் கிளைதோறும் கட்டிய வேர்களாலியன்ற ஊசல்களும், அவர்கள் தம்முகத்தினின்றும் அகழ்ந்து குவித்து வைத்த ஒளியவிந்த கண்ணின் கருமணிக் குவியல்களும், என்னும் இவற்றையு முடைத்தாய் மான்கோடணிந்து மயிற்றோகை தூக்கி மூங்கிற் கோலிலே கட்டப்பட்ட கொடிகளும் அசையா நிற்ப என்க.
 
(விளக்கம்) அரம் - வாளரம். பரல் - பருக்கைக் கற்கள். முரம்பு - மேட்டு நிலம். அடுக்கம் - பக்கமலைகள். சுரமுதல் - பாலைநிலம். புரிசை- மதில் பாழ் நிலவாழ்நர் - பாலைநிலமாக்கள். வேம்பின் சினைதோறும் அவர் அகழ்ந்தெடுத்த கருமணிப்பிறங்கல் என்க. உழைக்கோடு - மான் கொம்பு. பீவி - மயிற்றோகை. கழைக்கால் - மூங்கிற்கோல். கதலிகை - கொடி.