உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
52. பாலை நிலங் கடந்தது
 
            வில்லே ருழவர் செல்சாத் தெறிந்துழி
           நல்லாப் படுத்த நடுக லுழலையும்
           ஆளிடு படுக்கையு மரில்பிணங் கடுக்கமும்
           தாளிடு குழியுந் தலைகரந் தியாத்த
     30    புல்லும் பொள்ளலும் வெள்ளிடைக் களரும்
           நீரில் யாறு நிரம்பா நிலனும்
           ஊரில் காடு மூழடி முட்டமும்
           வறுஞ்சுனைப் பரவையுங் குறும்பரற் குன்றமும்
           இயற்கையி னமைந்தவுஞ் செயற்கையிற் சிறந்தவும்
     35    ஒன்றுகண் டவைபோற் சென்றுலப் பரிதாய்த்
           தட்பக் காலத்தும் வெப்ப மானா
 
                    (வழியிலுள்ளவை)
                26 - 36 :  வில்............ஆனாது
 
(பொழிப்புரை) பாலைநிலத்து மறவர்கள்அவ்வழியே செல்லா நின்ற வணிகர் கூட்டத்தை அலைத்துக் கொள்ளையிட்ட காலத்தே, அவ் வணிகர் கொணர்ந்த நல்ல ஆன்களைக் கைப்பற்றிக் கொணர்ந்து அகப்படுத்திக் கொள்ளற்கமைத்த நடுகற்களையுடைய உழலை மரங்களிடப்பட்ட வேலிகளையும், ஆறலைப்புழித் தம்மாற் கொல்லப்பட்ட மக்கட்பிணத்தை மறைத்தற்குக் குவிக்கப்பட்ட கற்குவியல்களையும், சிறுதூறுகள் பின்னிக் கிடக்கும் சிறு குன்றுகளையும், கொல்லப்பட்டோர் கால்களை இட்டுவைத்துள்ள குழிகளையும், அவர் தம் தலைகளை மறைத்து வைத்து முடியிடப்பட்ட புற்களையும், மரப்பொந்துகளையும், பாழிடமாகிய களர் நிலத்தையும், நீர் இல்லாத யாறுகளையும் சமமில்லாத நிலத்தையும், ஊர்களில்லாத காடுகளையும், முறையே அடிப்பாடாக இருந்து பின்னர் வழி இல்லையாயிருக்கு மிடங்களையும், நீரற்ற சுனைப்பரப்புக்களையும், குறிய பரற்கற்கள் மிக்க சிறு மலைகளையும், இன்னோரன்ன இயற்கைப் பொருள்களையும், மக்கள் செயற்கையாலியன்ற பொருள்களையும் உடையதாய், ஓரிடத்திற் கண்டாற் போன்று யாண்டுங் காணப்படுவதாய்ச் செல்லுந்தோறும் முடிதலில்லாதாய்க் கார்ப்பருவத்தேயும் வெப்பம் ஒழியாமல் என்க.
 
(விளக்கம்) ஒழியாமல் "பாலை தழீஇய பயனறு பெருவழி" (80) என முடியும். வில்லேருழவர் - வில்லை ஏராக உடைய உழவர்; மறவர். சாத்து - வணிகர் குழு. சுற்றிக் கற்றூண்களைத் துளைத்து நட்டு அத்துளைகளிலே மூங்கிலைச் செலுத்தி அடைந்திருக்குமிடத்தே ஆக்களைப் புகுத்தி அடைப்பர் ஆகலின் அதனையே நடுகல் உழலை என்றார். பதுக்கை - பிணத்தை மறைக்கக் குவித்த கற்குவியல். அரில் - பிணக்கு. அடுக்கம் - சிறுதூறுகள் செறிந்து பின்னிக் கிடக்கும் சிறுகுன்றுகள். தாள் - வெட்டப்பட்ட கால். தலை - ஆறு செல்வோர் தலை. பொள்ளல் - பொந்து. நிரம்பா நிலம் சமமில்லாத நிலம். ஊழடிமுட்டம் - முறையே அடிப்பாடாக இருந்து பின்பு வழியில்லை யாகுமிடம். பரவை - பரப்பு. இயற்கையினமைந்தன, களர் யாறு சுனைமுதலியன. செயற்கையிற் சிறந்தவை கோயில் பதுக்கை முதலியன.