உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
52. பாலை நிலங் கடந்தது
 
            நுண்பொறிப் புறவின் செங்காற் சேவல்
           வெண்சிறைப் பெடையொடு விளையாட்டு விரும்பி
           வன்பர லார்ந்த வயிற்ற வாகிக்
           கண்பொரி கள்ளிக் கவர்சினை யேறிக்
     50    கூப்பிடு குரலிசை சேட்புலத் திசைப்பவும்
 
                      (புறா)
            46 - 50 :  நுண்..........இசைப்பவும்
 
(பொழிப்புரை) நுண்ணிய புள்ளிகளையுடைய புறவினத்துச் சிவந்த கால்களையுடைய சேவல்கள் தமது வெள்ளிய சிறகையுடைய பெடைப் புறவினோடு கூடி விளையாடலைப் பெரிதும் விரும்பி வன்மையுடைய பருக்கைக் கற்களை உட்கொண்டு நிரம்பிய வயிற்றையுடையனவாய்க் கணுக்கள் பொரிந்துள்ள கள்ளிமரத்தின் கவர்த்த கிளையிலேறியிருந்து அப்பெடைகளைக் கூவியழையா நின்ற குரலோசை மிகத் தொலைவினுள்ள இடங்களினும் சென்று ஒலியா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) பொறி - புள்ளி. புறவின்சேவல்- ஆண்புறா. ஓரினப் புறாக்கள் சிறுசிறு கற்களைப் பொறுக்கி விழுங்குமியல்புடையன. இதனை, 'பொறி வரிப் புறாவின் செங்காற் சேவல் சிறுபுன் பெடையொடு சேட் புலம் போகி அரிமண லியவிற் பரறேர்ந் துண்டு' எனவரும் அகத்தானும் (271) உணர்க. இவற்றைத் தூதுணம்புறவு என்ப. தூது - கல். கண் - கணு.