உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
52. பாலை நிலங் கடந்தது
 
            கானப் பன்றித் தோன்முலைப் பிணவல்
           குரங்குநடைக் களிற்றொடு திரங்குமரற் சுவைத்து
           நீர்நசைக் கெள்கித் தேர்மருங் கோடவும்
           உள்ளழ லறாஅ தொள்ளழ லன்ன
     55    செம்முக மந்தி கைம்மகத் தழீஇப்
           பைங்குழைப் பிரச மங்கையி னக்க
           நொதுமற் கடுவ னதுகண் டாற்றாது
           காஞ்சிரங் கவர்கோற் கவின்பெறத் தொடுத்த
           தண்டே னூட்டித் தாகந் தணிப்பவும்
 
                  (விலங்கு முதலியன)
         51 - 59 :  கானப்பன்றி..........தணிப்பவும்
 
(பொழிப்புரை) காட்டுப் பன்றியாகிய தோலாய் வற்றிய முலையினையுடைய பெண் பன்றிகள் தமது தளர்ந்த நடையையுடைய ஆண் பன்றிகளோடு வற்றிய மரற்கொடியைத் தின்று விட்டு நீர்வேட்கையான் மெலிந்து பேய்த் தேரை நீர் என்று கருதி அதனை நோக்கி ஓடா நிற்பவும், ஒள்ளிய நெருப்புப் போன்று சிவந்த முகத்தை யுடைய பெண் குரங்கு தனது இளமகவினைத் தழுவிக் கொண்டு தனது வயிற்றுத் தீத்தணியப் பெறாமையாலே பசியதளிரில் சிந்தியுள்ள தேனைத் தனது அகங்கையிற் கொண்டு நக்கா நிற்பப் பக்கத்திருந்த ஆண் குரங்கு அதுகண்டு பொறாமல் காஞ்சிமரத்தின் கவர்த்த கொம்பின்கண் அழகுறத் தொடுக்கப் பட்ட குளிர்ந்த தேனைக் கொணர்ந்து அப்பெண் குரங்கிற்கு ஊட்டி அதன் வேட்கையைத் தணியா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) கானப்பன்றி - காட்டுப்பன்றி, பிணவல் - பெண் பன்றி. குரங்குதல்-தளர்தல். களிறு-ஆண்பன்றி. எள்கி-மெலிந்து. தேர் -பேய்த்தேர்; கானல். உள்ளழல்-வயிற்றுத்தீ. பிரசம் - தேன். நொதுமல் - பக்கம் மந்தி - பெண்குரங்கு. கடுவன்-ஆண்குரங்கு. காஞ்சிரம்-எட்டிமரம். கணு.