உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
52. பாலை நிலங் கடந்தது
 
         
     60    வெங்கற் சாரல் வேய்விண் டுதிர்த்த
           அங்கதிர் முத்த மணிமழைத் துளியெனக்
           காட்டுக் கோழிச் சூட்டுத்தலைச் சேவல்
           குத்த லானாது தத்துற்றுத் தளரவும்
           கயந்தலை தழீஇய கறையடி யிரும்பிடி
     65    நயந்தலை நீங்கிய நாரின் முருங்கை
           வெண்பூங் கவள முனைஇ நெல்லிப்
           பைங்கா யமிழ்தம் பல்வயி னடக்கி
           யாறுசெல் வம்பலர் சேறுகிளைத் திட்ட
           உவலைக் கேணி யவலடுத் துலாவவும்
 
                    (இதுவுமது)
          60 - 69 :  வெங்கல்..........உலாவவும்
 
(பொழிப்புரை) வெப்பமுடைய மலைச்சாரலின் கண்ணே மூங்கில்கள் வெடித்துதிர்த்த அழகிய ஒளியுடைய முத்தாகிய மணிகளைக் கண்ட காட்டுக் கோழியின் சூட்டமைந்த தலையினையுடைய சேவல் அவையிற்றை மழைத்துளிகள் என்று கருதித் தாவித் தாவிக் கொத்தியும் எடுக்கவியலாமையால் தளரா நிற்பவும், கன்றினைத் தழுவிய உரல் போன்ற அடியினையுடைய கரிய பிடியானை ஈரம்புலர்ந்த நாரற்ற முருங்கையினது வெளிய மலராகிய கவளத்தைத் தின்று வெறுப்புற்று நெல்லியினது பசிய காயாகிய அமிழ்தத்தைப் பல்லையுடைய தன் கவுளிலே அடக்கிக் கொண்டு அப்பாலை நிலத்திலே சென்ற வழிப்போக்கர் சேற்றைத் தோண்டி யியற்றியதும் தழையுதிர்ந்து மூடப்பட்டதுமாகிய கேணியையுடைய பள்ளத்திலே சென்று பார்த்து அங்கும் நீர் பெறாமல் அங்குமிங்கும் உலவா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) கல் - மலை. விண்டு - வெடித்து. முத்தமாகிய மணி யென்க. சூட்டு - உச்சிக் கொண்டை. தத்துற்றுக் குத்தல் என்க. கயந்தலை - யானைக்கன்று. கறை - உரல். நயம் - ஈரம். முனைஇ - வெறுத்து. அமிழ்தம் - உணவு. வம்பலர் - புதியவர். ஈண்டு வழிப்போக்கர். உவலை - தழை. அவல்-பள்ளம்.