உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
52. பாலை நிலங் கடந்தது
 
         
     70    செந்தளி ரிருப்பைப் பைந்துணர் வான்பூத்
           தீஞ்சுவை நசைஇய தூங்குசிறை வாவல்
           கல்லெனத் துவன்றிப் பல்வயிற் பறப்பவும்
           இன்னவை பிறவும் வெம்மையின் வருந்தி
           நடப்பவும் பறப்பவு மிடுக்க ணெய்தி
     75    வேட்டச் செந்நாய் வேண்டா தொழித்த
           காட்டுமா வல்சியர் கரந்தை பாழ்பட
           வெட்சி மிலைச்சிய வில்லுறு வாழ்க்கைச்
           சிறுபுல் லாளர் சீறூர்க் கியங்கும்
           கற்குவி புல்லதர் பற்பல பயின்று
     80    பாலை தழீஇய பயனறு பெருவழி
 
                     (இதுவுமது)
          70 - 80 :  செந்தளிர்..........பெருவழி
 
(பொழிப்புரை) சிவந்த தளிர்களையுடைய இருப்பை மரத்தினது பசிய கொத்தாகிய வெளிய மலரினது இனிய சுவையினை விரும்பிய, தலை கீழாய்த் தூங்கா நின்ற சிறகினையுடைய வௌவால்கள் கல்லென்று ஒலித்துக் கூடிக் கூடிப் பல்வேறிடங்களினும் பறந்து திரியா நிற்பவும் இவை போல்வன பிறவும் வெப்பத்தாலே வருந்தி மேலும் நடப்பனவும் பறப்பனவுமாகிய இவ்வுயிரினங்கள் பசியாலும் நீர் வேட்கையாலும் துன்பம் எய்தா நிற்பவும் வேட்டையாடாநின்ற செந்நாய் கொன்று தின்று தனக்கு வேண்டாமையால் போகட்டுப் போன காட்டு விலங்குகளின் ஊனை உணவாகக் கொள்கின்றவரும் கரந்தை சூடிய மறவர் பாழ்பட்டுப் போம்படி வெட்சிப்பூச்சூடிய வில்லாலே வருகின்ற வாழ்க்கையையுடையவரும் ஆகிய சிறிய புன்மையுடைய பாலைநில மாக்கள் வாழ்கின்ற சிற்றூர்கட்குச் செல்லும் பரற்கற்கள் குவிந்த புல்லிய சிறுவழிகள் பலவற்றையும் தன்னுளடக்கிக்கொண்டு அப்பாலை நிலத்தே பொருந்திய பயனற்ற பெரிய இந்நெறியை என்க.
 
(விளக்கம்) தூங்கு வாவல், சிறை வாவல் எனத் தனித்தனி கூட்டுக. சிறை - சிறகு. வாவல் - வௌவால். கல்லென: ஒலிக் குறிப்பு. நடப்ப - விலங்கு. பறப்ப - பறவை. எய்தி - எய்த. வேட்டம் - வேட்டை. காட்டுமா - காட்டு விலங்கு. வல்சி - உணவு. கரந்தை - கரந்தை யொழுக்க மேற்கொண்டோர்; அவராவார் - ஆநிரையை மீட்பவர். வெட்சி - வெட்சியொழுக்கம். அஃதாவது ஆநிரை கவர்தல் நிரலே இவர் கரந்தை மலரும் வெட்சி மலரும் சூடுதன் மரபு. புல்லாளர் - புன்மையுடையோர்..