உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
52. பாலை நிலங் கடந்தது
 
            வலிகெழு வயந்தகன் வத்தவ நின்யாழ்
           நிலமிசை வீழ்ந்தது நிற்கநின் பிடியென
           நலமிகு புகழோய் நாலிரு நூற்றுவிற்
     95    சென்றது கடிதினிச் செய்திற னிதன்மாட்
           டொன்று மில்லை யுறுதி வேண்டின்
           தந்த தெய்வந் தானே தருமெனப்
           பின்னிலை வலித்து முன்னிலை கூறிய
           இன்னாப் போகுதற் காகும் பொழுதெனத்
     100    துன்னார்க் கடந்தோன் றோன்றக் கூறிப்
           பறந்துசெல் வதுபோற் சிறந்தவன் கடாவலின்
 
                      (இதுவுமது)
             92 - 101 :  வலி..........கடாவலின்
 
(பொழிப்புரை) அது கண்ட வலிமை பொருந்திய வயந்தக குமரன் "வத்தவ வேந்தே ! நின்னுடைய கோடவதி நழுவி நிலத்தின்கண் வீழ்ந்தது; நின்னுடைய பிடியானை நிற்பதாக!" என்று கூற அது கேட்ட உதயணகுமரன் "நலமிகுகின்ற புகழுடையோய் ! இப்பொழுது அவ்விடத்தினின்றும் விரைந்து பிடி எண்ணூறு விற்கிடைத்தொலை கடந்து விட்டது. ஆதலால் இவ்வியாழின் பொருட்டு இனி யாம் செய்யக் கிடந்த செயல் ஒன்றேனுமில்லைகாண் ! நமக்கு உறுதியைத் தர விரும்பின் நமக்கு அதனை முன்புதந்த ஊழே மீண்டும் தருதல் கூடும். அவ்வியாழின் பொருட்டு இப்பிடியினைப் பின்பக்கத்தே செலுத்தி மீண்டும் முன்னர் நின்னாற் கூறப்பட்ட இன்னாமையுடைய இவ்வழியைக் கடந்து போதற்குக் காலம் மிகுதியும் ஆகும். ஆகவே அதுபற்றிக் கவலற்க !" என்று பகைவரையெல்லாம் வென்று கடந்த அவ்வுதயணகுமரன் அவ்வயந்தகனுக்கு விளங்கக் கூறி விண்ணிலே பறந்து செல்வது போன்று யானை செலுத்தலிற் சிறந்தவனாகிய அவன் செலுத்துதலாலே.
 
(விளக்கம்) வத்தவ : விளி. புகழோய் என்றது வயந்தகனை. வில் - ஓரளவு. இதன் மாட்டு - இவ்வியாழின் திறத்திலே. தெய்வம் - ஊழ். "உய்த்துச் சொரியினும் போகா தம" என்பது பற்றி "உறுதி வேண்டின் தந்த தெய்வம் தானே தரும்" என்றான். முன் நின்னாலே நிலைமை கூறப்பட்ட இன்னாமையுடைய வழியை என்க. துன்னார்க் கடந்தோன் - உதயணன். சிறந்தவன் - பெயர். அவன் சிறந்து கடாவலின் எனினுமாம்.