உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
52. பாலை நிலங் கடந்தது
 
            வாயிற் கூறி யாங்கு மற்றுத்தன்
     120    நோயின் கடுமை நூக்குபு நலிய
           என்னுயிர் விடுவ லிழிந்தனை யாகி
           நின்னுயிர்க் கேம மறிந்தனை நீங்கென
           வடுத்தீர் பெரும்புகழ் வத்தவ ரிறைவனை
           விடுப்பது போல நடுக்க மெய்திய
     125    மெய்யிற் கூறிக் கைவரை நில்லாது
           வெந்நோய் முடுக வேற்றவ னாடிறந்
           தைந்நூற் றெல்லையு ளசைந்ததாற் பிடியென்.
 
                      (இதுவுமது)
            119 - 127 :  வாயில்..........பிடியென்
 
(பொழிப்புரை) "நோயினது கடுமை மிகுந்து என்னைத் தள்ளி நலிதலாலே யான் இப்பொழுதே எனது உயிரை விட்டொழிவேன்; நீ தானும் என்மேலிருந்து இறங்கி நினது உயிர்க்குப் பாதுகாப்பினை ஆராய்ந்துணர்ந்து செல்வாயாக!" என்று தன் வாயினாலே எடுத்துக் கூறிக் குற்றந் தீர்ந்த வத்தவர் மன்னனாகிய உதயண குமரனை அவ்விடத்திலேயே விடைகொடுத்து விடுவது போல நடுக்க மெய்திய தனது உடலின் மெய்ப்பாடுகளாலே விளக்கிப் பொறுக்கலாமளவின் நில்லாமல் வெவ்விய அந்நோய் விரைந்து பெருகுதலானே, பகைவனாகிய பிரச்சோதனன் நாட்டினைக் கடந்து ஐந்நூறு காவதஞ் சென்று அப்பால் அப்பத்திராபதி ஓய்ந்தது என்க.
 
(விளக்கம்) பிடி தன் உடல் வேறுபாட்டால் வாயினாற் கூறுவது போன்று என்னுயிர் விடுவேன் என்று விளக்கியது என்றவாறு. நூக்குபு - தள்ளி . ஏமம்- பாதுகாப்பு. மெய்யிற் காணப்படும் மெய்ப்பாடுகளாலே உணர்த்தி என்க. வேற்றவன் - பகைவன்; பிரச்சோதனன். அசைந்தது - ஓய்ந்தது.

           52. பாலைநிலங் கடந்தது முற்றிற்று..