உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
53. பிடி வீழ்ந்தது |
|
விளக்குறு
வெள்ளி முளைத்துமுன்
றோன்ற வடக
மீக்கொள் வாளொடு
களைந்ததன்
படுகரை மருங்கிற் பாங்குற
வைத்து
வருதிரை புகூஉம் வருணன் போல 85
இருகரை மருங்கினும் புள்ளெழுந்
தியம்பத் தெளித்தலைத்
தண்ணீர் குளித்தன னாடி
வாய்மைக் கொத்த வாய்ப்பூச்
சியற்றித்
தூய்மைக் கொத்த தொழில னாகி |
|
(இதுவுமது) 81 - 88:
விளக்குறு........தொழிலனாகி் |
|
(பொழிப்புரை) விளக்கம்
பொருந்திய வெள்ளிக்கோள் குணதிசையிற் றோன்றித் தன்முன்னர்த்
தோன்றா நிற்பக் கண்டு உதயணன் தனது மோலாடையையும் அரையிற் கட்டிய
வாளையும் களைந்து அக் குளத்தினது பெரிய கரைக்கண் பொருத்தமுற வைத்து மேல்
மேல் வருகின்ற அலையையுடைய கடலின்கட் புகா நின்ற கடற்கிறைவனாகிய
வருணன் போன்று அக்குளத்தின் இருகரைப்பக்கங்களினும் அமர்ந்திருந்த
பறவையினங்கள் எழுந்து ஆரவாரியாநிற்பத் தெளிவையுடைய இடத்தை
யுடைய குளிர்ந்த நீரிலே குளித்து நீராடி மறைமொழிக் கேற்ற வாய்பூசுதலும்
செய்து தூய செயலுக் கேற்ற பிறகடன்களையும் செய்பவனாய் என்க. |
|
(விளக்கம்) வடகமீக்கோள்
: இருபெயரொட்டு: மோலாடை. அதன் - அக்குளத்தின். வருதிரை - கடல்:
அன்மொழி. வருணன் கடற்றெய்வம். தெளி - தெளிவு. தலை - இடம். வாய்மை -
மறைமொழி. தூய்மை - அகந்தூய்மையும் புறந்தூய்மையும் உடையனாதற் கொத்த
தொழில் என்க. அவை தியான முதலியன வென்க. |