உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
            விளக்குறு வெள்ளி முளைத்துமுன் றோன்ற
           வடக மீக்கொள் வாளொடு களைந்ததன்
           அரும்படைத் தானை யரசூர்ந் தியற்றிய
     90    இரும்பிடி யினிதுழி யேறுக சென்றெனப்
           போர்க்கடம் பூண்ட பொருவலித் தடக்கையின்
           நீர்க்கட னாற்றிய நியமக் கிரிகையன்
           பூம்போ தணிந்த வாங்குகரை மருங்கின்
           வழிபடு தெய்வம் வணங்குவன னேத்திக்
 
                     (இதுவுமது)
              89 - 94: அரும்படை.........ஏத்தி
 
(பொழிப்புரை) '''''பகைவரான் வெல்லுதற்கரிய படைக்கலன் ஏந்திய
  சேனைகளையுடைய பிரச்சோதன மன்னன் ஏறியூர்ந்து ஒப்பனையும்
  செய்யப்பட்ட பெரிய பிடியானையாகிய பத்திராபதி மனக்கினிய வானவர்
  உலகத்தே சென்று பிறப்பெய்துக!' என்று கூறிப் போர்த்தொழிலாகிய
  கடமையை மேற்கொண்ட அப்போர்த்தொழிலில் வலிமையுடைய தனது
  பெரிய கையினாலே அவ்வியானைக்குச் செய்தற்குரிய நீர்க்கடன்களைச்
  செய்த முறைமையினையுடையவனாய்ச் செய்து தீர்த்துப்பின்னர், அழகிய
  மலரான் அழகுற்ற வளைந்த அக்குளக்கரையின் கண்ணேறிநின்று தான்
  வழிபடுதற்குரிய அருகக்கடவுளை வணங்கி வாழ்த்தி என்க.
 
(விளக்கம்) அரசு : பிரச்சோதனன். இனிதுழி - மனக்கினிய வானவருலகம்.
  நீர்க்கடன். நீராலே செய்யும் இறுதிக்கடன். நியமம் - முறை. வாங்கு -
  வளைந்த. வழிபடுதெய்வம் என்றது அருகனை.