உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
            பைந்தொடிப் பணைத்தோள் பைய வீசி
           அஞ்செந் தாமரை யகவித ழன்ன
     150    சில்லரித் தடங்கண் மெல்லென மிளிர
           மானின் மடப்பெடை மம்ம ரெய்த
           வேனிற் காலத்துத் தான நோக்கி
           மணிக்கட் பீலி மாமயிற் பேடை
           அணிக்கவின் மென்னடை யனுக்க வசைந்தசைந்
     155    தியலா நின்ற காலை வியலிடத்
 
                    (இதுவுமது)
          148 - 155: பைந்தொடி.........நின்றகாலை
 
(பொழிப்புரை) தனது பசிய தொடியணிந்த மூங்கிலன்ன தோள்களை
  மெல்லென வீசி அழகிய செந்தாமரை மலரின் அகவிதழ்போன்ற
  சிலவாகிய செவ்வரியோடிய தன் பெரிய கண்கள் மெல்லென மிளிரா
  நிற்பவும், தன்னைக் கண்ட மானினத்து இளம் பிணைகள் மயக்க
  மெய்தா நிற்பவும், வேனிற் பருவத்துக்குரிய அப்பாலை நிலவழியை
  நன்கு நோக்கி நீலமணிபோன்ற புள்ளிகளையுடைய தோகையையுடைய
  பெரிய மயிலினது பெடையினது பேரழகுடைய நடையையும் வருத்தும்படி
  அசைந்து அசைந்து செல்லாநின்ற பொழுதென்க.
 
(விளக்கம்) பைய - மெல்ல. சில்லரி - சிலவாகிய கோடு. மிளிர - பிறழ.
  வேனிற் காலத்துத் தானம் - பாலைநிலம். பெடைமான் தன்னைக் கண்டு
  மயங்க வென்க.