உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
         
     155    தியலா நின்ற காலை வியலிடத்
           தெல்லை யாரிரு ணல்வினை முன்னர்ப்
           பாவம் போலப் பறைந்துகை யகலக்
           கோவத் தன்ன குழவிக் கோலமொடு
           குணமலைப் பிறந்து குடவரை நிமிர்ந்து
     160    கனல்கதிர் கான்று கடுமை கூராத்
           தனிக்காற் றேரோன் றனிமை யெய்த
 
                 (இதுவுமது)
         155 - 161: வியலிடத்து............எய்த
 
(பொழிப்புரை) அகன்ற உலகத்தே நிரம்பிய இருள் நல்வினையின்
  முன்னர்த் தீவினை இல்லையானாற் போன்று தேய்ந்து, துவரக்கெட்டு
  மறையாநிற்ப, இந்திர கோபத்தின் நிறம் போன்ற சிவந்த நிறமுடைய
  இளமையழகோடு ஒற்றையுருளுடைய தேரையுடைய கதிரவன் கீழை
  மலையிலே தோன்றி மேலைமலை நோக்கி உயர்ந்து கனலும் கதிரை
  வீசி மேலும் மேலும் கொடுமையின்கண் மிகுந்து வானவெளியிலே தான்
  ஒருவனே யாகித் திகழாநிற்ப என்க.
 
(விளக்கம்) வியலிடத் தெல்லை - உலகத்தே. தவமிக்குழிப் பாவம்
  தேய்ந்தொழியும் என்பதனை ''தவத்தின்முன் னில்லாதாம் பாவம்'' என்னும்
  நாலடியினும் (51.) காண்க. கோவம் - இந்திர கோபம். தனிக்கால் -
  ஒற்றையுருள். ஏனைக் கோள்களும் மீன்களும் மறைதலின் கதிரோன்
  தானே எய்தினன் என்க.