உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
54. வயந்தகன் அகன்றது
 
          குறிப்பெழுத் தோலை பொறிப்புனைந் தொற்றிய
         அம்மடி யன்றியு மாகு மெய்ம்மொழி
         வருவோர்க் கறியக் கூறி மற்றென்
         செருவில் வேந்தன் செய்கை யென்ற
    100   பின்ன ரல்லது துன்னின ரிவரெனத்
         துணியப் பெறாயெனத் துணிந்தியான் கூறிய
         பணிவகை யுண்டது பண்டைக் காலத்
         தின்றிந் நிலைமைக் கன்றது நினைப்பின்
         அற்றந் தருமென வுற்ற தோழற்
    105   கடையா ளருண்மொழி யறியக் கூறிப்
 
                   (இதுவுமது)
         96 - 105 : குறிப்பெழுத்து............கூறி
 
(பொழிப்புரை) பின்னரும் நின்பால் என்னுடைய தூதராக வருவோர்பால் யான் எழுதிய குறிப்புக்களை உடையதும் எனது இலச்சினை பொறிக்கப்பட்டதுமாகிய ஓலைச்சுருள் பெற்று என் செய்தியையும் அவர் நீ யறியும்படி கூறி இறுதியாக 'செருவில் வேந்தன் செய்கை என் கொல்' என்னும் இவ்வடையாளச் சொல்லைக் கூறிய பின்னரன்றி அவரை என் தூதர் என நம்பி ஏற்றுக் கொள்ளறக்' என்றும் அக்காலத்தே அவன்பால் அன்றிருந்த சூழ்நிலை காரணமாக யான் ஆராய்ந்து தெளிந்து கட்டளையிட்டதுண்டு காண். அக்கட்டளை பண்டிருந்த சூழ்நிலைக்கே பொருந்துவதாம். இற்றை நாள் இந்தச் சூழ்நிலைக்குப் பொருந்தாது; அங்ஙனமாயினும் அவன் அக்கட்டளையை இன்றும் மேற்கொள்ளுவானாயின் அஃது உன் செலவிற்குச் சோர்வுண்டாக்குமன்றோ. எனவேஇன்றியமையாதாயின் நீயும் இந்த அடையாளமாயருளிய 'செருவில் வேந்தன் செய்கை யென்' என்னும் இச்சொற்றொடரைக் கூறி நின்னை நம்புமாறு செய்து கொள்க! என்று அவ்வயந்தகன் தெரியுமாறு விரித்து விளம்பி என்க.
 
(விளக்கம்) எனது குறிப்பினை எழுதிய ஓலை என்க. பொறி - இலச்சினை. அம்மடி - அவ்வோலைச்சுருள். ஆகும் மெய்ம்மொழி, ஆக்கந்தரும் என் மெய்ம்மொழி என்க. வருவோர்க்கு: வேற்றுமை மயக்கம். 'செருவில் வேந்தன் செய்கையென்'' என்னும் இத்தொடரை இவ்வாய்பாட்டிலேயே இறுதியாகக் கூறுபவரே என்னுடைய உண்மைத்தூதர்; இத் தொடர் கூறாராயின் அவரெல்லாம் நமரல்லர் என்று கருதுக! என்று அறிவித்திருந்தேன் என்றபடியாம். துன்னினர் - தமர். அங்ஙனம் கூறியதற்குக் காரணமும் அக்காலத்திருந்தது என்பான் அது பண்டைக் காலத்தது இன்று இந்நிலைமைக்கு அன்று என்றான். ஒரோவழி அக் கட்டளையை இப்பொழுதும் மேற்கொள்வானாயின் நீயும் இத்தொடரைக் கூறி நம்புமாறு செய்துகொள் என்பது கருத்து. அதனை அவனும் இப்பொழுது மேற்கொள்வானல்லன் நினைப்பின் அற்றந்தரும் என்றான். அற்றம் - வயந்தகன் மொழியை நம்பாமை. அடையாள வருண்மொழி என்பதன்பால் வகரமெய்யும் அகரமும் செய்யுள் விகாரத்தாற் றொக்கன்