உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
54. வயந்தகன் அகன்றது
 
          படையாள் கடுந்தொழிற் பற்றா மன்னன்
         பாவையைத் தழீஇப் பண்ணுப்பிடி யேற்றி
         எய்தா வரும்பொரு ளெய்திய பின்றைப்
         பொய்வகை புணர்த்த புணர்ப்பும் போந்தபின்
    110   செய்வகை யறிதற் பொருட்டுஞ் சேனையுள்
         உய்வகை மற்றவ னொழிந்த வுறுதியும்
         உறுதி யோரான் பிறிதுநினைந் தொற்றிக்
         குஞ்சரங் கடாஅய்க் கொணர்மின் சென்றெனும்
         வெஞ்சின வீரன் வெகுட்சியும் வெகுட்சியின்
 
                   (இதுவுமது)
         106 - 114 : படையாள்..........வெகுட்சியும்
 
(பொழிப்புரை) பின்னரும் 'நண்பனே! நால்வகைப்படையையும் நன்கு ஆளாநின்ற கடிய போர்த்தொழிலையுடைய நம் பகை மன்னனாகிய பிரச்சோதனமன்னன் மகளாகிய வாசவதத்தையைக் கையாற்றழுவி, ஒப்பனை செய்யப்பட்ட பிடியானையின்மீது ஏற்றி - எய்தற்கரியபொருளை யான் எய்தியபின்னர் -- வராகன் முதலியோர் பால் பொய்வகையான மொழிகளைக் கூறி விடுத்ததனையும்; யாம் வந்தபின்னர் மேலே செய்தற்குரிய காரியங்களை அறிதற் பொருட்டு நாம் உய்வகை செய்த யூகியந்தணன் உஞ்சை நகரத்தினூடே சென்ற உறுதியினையும் இச்செய்தியுணர்ந்த வெவ்விய சின முடைய வீரனாகிய பிரச்சோதன மன்னன் இந்நிகழ்ச்சி தனக்கு உறுதிபயப்ப தென்பதனை உணராதவனாகப் பெரும்பழி வந்தெய்திய என்று நினைந்து, தன் படைஞரை நோக்கி, நீயிர் நம் யானைப்படை முதலியவற்றோடு சென்று அவனைப் பற்றிக் கொணர்மின் என்று கூறிய அவனது வெகுளியையும் என்க.
 
(விளக்கம்) பற்றாமன்னன் - பிரச்சோதனன். பாவை - வாசவதத்தை. பண்ணுப்பிடி - ஒப்பனை செய்யப்பட்ட பத்திராபதி. எய்தா அரும் பொருள் என்றது, நினைத்தசெயலை முடித்த வெற்றியை. பொய்வகை என்றது வராகனுக்குக் கூறிய வஞ்சகமொழிகளை. அவன் என்றது யூகியை. பிறிது - பழி. வீரன் ஒற்றி நினைந்து சென்று கொணர்மின் எனும் என மாறுக. வெகுட்சி - சினம்.