உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
54. வயந்தகன் அகன்றது
 
         
     125   சேக்கையு ணின்றுநீ சென்ற செலவும்
          வாய்ப்பக் கூறி வாட்படை தொகுத்து
          வையம் பூட்டி வழிவரல் விரைந்தென்
          எவ்வந் தீர விருள்கழி காலைக்
          கோற்குறி யெல்லையுட் குறிவழி வம்மென
     130   வாட்டிறல் வத்தவன் வயந்தகற் போக்கிப்
 
                   (இதுவுமது)
          125 - 130: சேக்கை..........போக்கி
 
(பொழிப்புரை) இவ்விடத்தினின்றும் நீ செல்லாநின்ற இச் செலவின் காரணத்தையும் இடபகனுக்கு நன்கு விளக்கமாகக் கூறி வாளேந்திய படைகளைக் கூட்டிக் கொண்டு தேர்முதலிய ஊர்திகளையும் பூட்டிக்கொண்டு மீண்டு வருங்கால் வழியினும் விரைந்து வருக ! ஈண்டு என் துன்பந்தீரும்படி இற்றை இரவின் இருள் புலராநின்ற விடியற்காலத்தில் இவ்விடத்தினின்றும் அம்பு பாயும் எல்லைக்குள் குறித்த வழியிலே வருவாயாக, என்று கூறி வாட்போர் ஆற்றல் மிக்க உதயணன் அவ்வயந்தகனைப் போக்கி என்க.
 
(விளக்கம்) செலவும் - செலவிற்குரிய காரணமும் என்க. வையம் - என்றது தேர் முதலிய ஊர்தி என்னும் பொருள்படநின்றது. வழிவிரைந்து வரல் என மாறுக. வரல் - வியங்கோள். எவ்வம் - துன்பம். கோல் - அம்பு. வம் - வருதி. வத்தவன் - உதயணன்.