(விளக்கம்) பெருஞ்சிறைப்பள்ளிப்
பேரிருள் அம்முழையினூடு செறிந்த இருளுக்குவமை என்க. துன்பத்திற்கு உவமை
யன்று. இருள் போலும் துன்பம் என்ற பின்னர் துன்பக்கடல் எனப் பின்னரும்
உவமித்தல் கூடாமை யுணர்க. இருள் போலும் அம் முழைக்கண் இருளினூடே என
அவாய் நிலையான் வருவித்துக்கொள்க.
துன்பத்தைக் கடல் என்றமையின் அக்கடலுக்கு எதிராய் இன்பக் கடலாகி
என்க. மாந்தளிர் மேனி துன்பக்கடற் கெதிராய் இன்பக்கடலாகிப் பின்னரும்
அத்துன்பக்கடற்கு ஏந்து புணையும் ஆக என எச்சவும்மை கொடுத்து
ஓதுக. வாசவதத்தையைப் பெற்ற வின்பத்திற்கு முன்னே தான்பட்ட
துன்பமெல்லாம் இல்லையாய்ப் போதலின்: துன்பக்கடற்கு எதிராயதோர்
இன்பக்கடல் என்றார். மாதர் - வாசவதத்தை. தோழியும் மெல்லியலாதலின்
அவளையும் துயில்வித்தான். இதனால் அவனது அளியுடைமை புலனாம். |