(விளக்கம்) தென் புலம் - தென்றிசை. தன் கணவனாகிய உதயணன்
தென்றிசைக்கண் நின்றமையால் வாசவதத்தை அந்நாட் காலையிலே தெய்வந்
தொழாளாய் அத்திசை நோக்கித் தொழுதாள் என்க. தான் தமரிற் பிரிந்த
தனிமையை நினைந்து தன்னைப் பெரிதும் விரும்பிய தோழி என்க. படர் -
இப்பொழுதுற்ற இடையூறு காரணமாக வந்த துயர் என்க. வழிவந்த வருத்தத்தால்
மேனி வாடினள் என்க. மாதரை ஓம்பு என வியையும்.
தன்னுடன் போந்தது தான் செய்ததொரு குற்றமாகும் என்று வாசவதத்தை
கருதுவாளென வுட்கொண்டு காஞ்சனமாலையை நோக்கி அவன் செய்த
குற்றத்தாலுண்டாகும் நலத்தினைப் பற்றிய குறிப்புக்களை நீஎடுத்துக்
காட்டித் தேற்றுக என்றான் என்க. உடன்போக்குத் தந்தை தாயராற்
குற்றமாகக் கருதப் படினும் அதுவே கற்புக் கடம்பூண்ட மகளிர்க்கு அறமாம்
என்பதைச் சான்றோர் குறிப்புக் களை எடுத்துக்காட்டித் தேற்றுக
என்றவாறு.
|