உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
55. சவரர் புளிஞர் வளைந்தது
 
           காழ்த்த காலைக் கீழ்த்திசை முன்பகல்
          அன்றவட் பாடிய வணிவரி வயவன்
    35    இன்றிவ ணின்னே யிகற்படை தருதல்
          பொய்த்த லின்றி மெய்த்த தாமென
          அங்குபடு புட்குர லாண்டகை யஞ்சி
          வெங்கணை திருத்தி வில்லிடந் தழீஇ
          இரும்பிடை யிட்ட பெரும்புடைக் கச்சையன்
    40    வளிசுழற் றறாஅ முளிமரக் கானத்
          தென்கொ னிகழு மேத மின்றென
          நெஞ்சோ டுசாவுஞ் சிந்தைய னாகி
          வெஞ்சின வீர னின்ற காலை
 
               (இதுவுமது)

             33 - 43: கீழ்த்திசை..........நின்றகாலை

 
(பொழிப்புரை) இவ்வாறு கீழைத் திசைகளிலே முற்பகலிலே அற்றை நாள் அவ்விடத்தே அழகிய வரிகளையுடைய வயவன் இன்று இவ்விடத்தே இப்பொழுதே பகைப்படை கொணர்தல் உண்டு என்னும் நிமித்தம்பட ஒலித்த புட்குறி பொய்யாகாமல் அப்பொழுதே மெய்யாயிற்று அன்றோ என்று கருத அவ்வாறே அற்றை நாளினும் அவ்விடத்தே தோன்றிய புட்குரலாகிய அதே நிமித்தத்தைக் கேட்டலும், ஆண்மை மிக்க உதயணகுமரன் இன்றும் இப்பொழுதே பகைப்படை வருதல் தவிராது என்று அஞ்சித் தனது வெவ்விய கணைகளைத் திருத்தி விற்படையை இடக்கையிலே பற்றிக்கொண்டு இருப்புத்தகடுகளை இடை யிடையே அமைத்தியற்றப்பட்ட பெரிய பக்கங்களையுடைய கச்சையினை அணிந்தவனாய்க் காற்றுச் சுழன்று வீசுதலொழியாத உலர்ந்த மரங்களை யுடைய அக்காட்டின்கண்ணே இற்றைநாள் எத்தகைய இடையூறு நிகழுமோ? என்று தன்னெஞ்சோடு வினவும் சிந்தனை யுடையனாகி வெவ்விய சினமிக்க மறவனாகிய அவ்வுதயணன் இடையூற்றினை எதிர்பார்த்து நின்ற பொழுதென்க.
 
(விளக்கம்) வயவன் இன்றிவண் இன்னே படை தருதல் என்னும் குறிப்பமையப் பாடிய நிமித்தம் என்க. ஆண்டகை : உதயணன். முளிமரம் - உலர்ந்த மரம். ஏதம் - துன்பம். வீரன் : உதயணன்.