உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
55. சவரர் புளிஞர் வளைந்தது
 
           மடப்பிடி வீழ்ந்த மணிமலைச் சாரல்
    45    அடக்கருஞ் சீறூ ரரணக வுறையுளர்
          கணங்கொ டலைவனைக் கைக்கொண் டியங்கா
          அணங்கரும் பெருஞ்சாத் தவிய நூறிப்
          பல்விலைப் பண்டங் கவர்ந்துபய மறியார்
          சில்விலைக் கிடூஉஞ் செல்லா வாழ்க்கையர்
    50    சுரஞ்செல் வம்பல ரரும்பத மடக்கி
          மாணுறி யாத்த வாணத் தானையர்
          அடுகணை மறவ ரகலிலை யோமை
          நெடுநிலைத் திரடா ணேர்துணித் ததர்வைக்
          கொடிபுரை கயிற்றொடு கொளுத்தினர் சமைப்ப
 
               (வேடர் இயல்பு)

              44 - 54: மடப்பிடி..........சமைப்ப

 
(பொழிப்புரை) இனி, இளமையுடைய பத்திராவதி வீழ்ந்துயிர் நீத்த அந்த மணிகளையுடைய மலைச்சாரலின்கண்ணே பகைவராலே வென்று அடக்குதலரிய சீறூரின்கண் தகுந்த அரண்களின் அகத்தை உறையுளாக வுடையோரும், தங் கூட்டத்தை ஆட்சி கொள்ளுதலையுடைய தலைவனைத் தம் பாற் கொண்டு அப்பாலை நிலத்திலே யாண்டும் சென்று பிறரால் வருத்துதற்கரிய பெரிய வணிகர் கூட்டமும் மாண் டொழியும்படி கொன்று அவ்வணிகருடைய பலவாகிய விலைப் பண்டங்களையும் கவர்ந்து கொண்டு அப்பண்டங்களின் பயனை யும் அறியாதவராய் அவற்றிற்குரிய பெருவிலைக்கு விற்றலின்றி சிறிய விலைக்கே விற்றுண்ணும் வறுமையே மிக்க வாழ்க்கையை யுடையோரும், அப் பாலைநிலத்திலே புதியராகச் செல்வோருடைய பெறற்கரிய உணவுப் பொருளைக் கவர்ந்து அவ் வழிப்போக்கர் ஆடைகளையும் கவர்ந்து அவற்றை மாண்புடைய உறியாக்கி அவ் வுணவினையிட்டு வைக்கின்றவரும் அவ்வழகிய ஆடைகளையுடுப் போரும் கொல்லும் அம்புகளையுடையோரும் இலைகள் உதிர்ந்த ஓமை மரத்தினது நீண்ட நிலையினையுடைய திரண்ட அடியினை நேராகத் துணித்து அத்துணிகளை அதர்வையினது கயிற்றை யொத்த கொடியாலே கட்டிக் கொணர்ந்து அவ்விறகில் அக்கொடிக் கயிற்றோடு தீ மூட்டித்தசைகளைச் சமைத்துண்போரும் என்க.
 
(விளக்கம்) பிறரால் வென்று அடக்கரும் சீறூர் என்க. உறையுளர். உறையுளையுடையோர். உறையுள் - இருப்பிடம். கணத்தை ஆட்சி கொள் தலைவன் என்க. கணம் தேர்ந்து கொள் தலைவன் எனினுமாம். பிறரால் அணங்குதல் அரும் பெருஞ்சாத்து என்க. சாத்து - வணிகர் குழு. பயன் - அப்பொருள்களின் பயன் பெரும்பயன்றரும் பொருளையும் சிறு விலைக்குக் கொடுப்பர் என்றவாறு. செல்லாவாழ்க்கை - வறுமை. பதம் - உணவு. ஆணம் - அழகு. அகலிலை ஓமை - இலை அகல் ஓமை யென்க. அதர்வை - ஒரு கொடி; கயிறுபுரை கொடி என்க. தாம் ஆறலைத்துக் கொண்ட வுணவுப் பொருளைச் சமைப்ப எனினு மாம், சமைப்ப: பலரறிசொல்.