உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
55. சவரர் புளிஞர் வளைந்தது
 
         
    55    வடியி னன்ன வாளரித் தடங்கட்
          பைங்குழை மகளிர் பல்காழ்க் கலையோ
          டங்குழைச் செயலைத் தண்டழை யுடீஇக்
          காலி னியங்குநர் கற்குழிக் கொளினும்
          நூலி னியன்றவை நோக்கார் சாபமென்
    60    றாடூஉவு மகடூஉவு மாடு மறியார்
 
               (இதுவுமது)

              55 - 60: வடி.........அறியார்

 
(பொழிப்புரை) மாவடுப் பிளவும் வாளும் போன்ற செவ்வரி யோடிய பெரிய கண்களையும் பசிய குழையினையும் உடைய நனி நாகரிக மகளிர்க்குச் செய்யப்பட்டனவும், தம்மால் ஆற லைத்துக் கொள்ளப் பட்டனவுமாகிய பலவாகிய வடங்களை யுடைய மேகலையணியோடே அழகிய தளிரையுடைய அசோ கினது குளிர்ந்த தழையானியன்ற ஆடையினையும் உடுத்துத் தங்கால்களிலே பரற் கற்கள் உறுத்திக் குழி செய்யினும் வருந் தாராய்க் காற்றெனக் கடிது இயங்குவோரும், சான்றோர் இயற்றிய மெய்ந்நூல்களிற் கூறப்பட்ட அற முதலிய உறுதிப் பொருளை எஞ்ஞான்றும் கண்களாலே நோக்குதலும் செய்திலாரும், கண்டோர் தவத்தோர் சாபத்திற்கு ஆளாயவர் என்று கருதும்படி ஆடவரும் மகளிருமாய்ப் பொன் மணி முதலியவற்றின் பண்பறியாதோரும் என்க.
 
(விளக்கம்) வடி - மாவடு. வாளரித் தடங்கண் பைங்குழை மகளிர் என்றது நாகரிக நங்கையரை. அவர்பொருட்டியற்றப் பட்டு இவராற் கொள்ளை கொள்ளப்பட்ட பல்காழ்க்கலை என்பது கருத்து. காழ் - வடம். காலின் இயங்குநர் என்றதற்கு ஊர்தி முதலி யன இன்றிக் காலாலேயே இயங்குவோர் எனினுமாம். கல் காலிலே குழி கொள்ளினும் என்க. கற் குழி கொளினும் காலினியங்குநர் என மாறுக, மாடு - பொன்.