உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
55. சவரர் புளிஞர் வளைந்தது |
|
காலை யெழுந்து கணங்கொண் டீண்டிச் 70
சோலைப் போதகச் சுவடுறுத்
துழல்வோர்
காஅட்டுப் பிடிமற் றன்றிது
கருதின் நாஅட்டுப்
பிடியே நடந்தது
தானென முதிர்புலா
னாற்றமொடு முன்முன்
வீசி உதிர வழியே
யதிர வோடிப் 75 பிடியது வீழ்ச்சியும்
பெண்பாற் சுவடும்
அடுதிற லாடவ ரற்றமும்
பிறவும் படியி
னாய்ந்து கடுகுவன
ரோடி வெள்ளிடை
வெண்மணன் மிதித்த
சுவடுதொறும் புள்ளடி
யொழுக்கம் புரிவனர் நோக்கி
|
|
(வேடர் செயல்)
69 - 79:
காலை...........நோக்கி
|
|
(பொழிப்புரை) அற்றைநாட் காலையிலே எழுந்து கூட்டமாகக் கூடி
அப்பாலை நிலத்தே ஒரு சோலை மருங்கின் பத்திராபதி என்னும்
பிடியானை நடந்த அடிச் சுவட்டினைக் கண்டு கூர்ந்து நோக்கித் திரி பவர்,
ஈண்டு நடந்தயானை காட்டியானையிற் பிடி யானையன்று ; நாட்டின்கட் பாகராற்
பயிற்சி பெற்ற பிடியானையே யாகும் என்று தெளிந்து மிக்க புலானாற்றத்தை
நுகர்தலோடு ஒருவருக்கொருவர் முன்னே முன்னே தம் கையை வீசிக் கொண்டு
அக்குருதி படிந்த வழி யிலே நிலமதிரும்படி யோடிச் சென்று ஆங்கோர் இடத்தே
அப்பிடியானை வீழ்ச்சியுற்றதையும் அப்பால் மகளிர் சீறடிச் சுவடும்
கொல்லும் திறம் படைத்த ஆடவர் அடிச் சுவடும் பிறவுமாகிய அடையாளங்களையும்
நிலத் திலே ஆராய்ந்து அச்சுவடுகளைப் பற்றிக்கொண்டு விரைந்தோடி
வறுநிலத்திலே அடியிட்டமையாலுண்டான அச்சுவடுதோரும் பறவைகள்
நடந்த அடிச்சுவட்டொழுக்கங்களையும் விரும்பிக் பார்த்து
என்க.
|
|
(விளக்கம்) கணம் - கூட்டம். போதகம் - யானை. உறுத்து
நோக்கியுழல்வோர் என்க. அச்சுவடு ஒழுங்கற்றுக் கிடத்தலான் காட்டியானை
இங்ஙனம் ஒழுக்கமாக அடியிடுதலில்லை ஆதலால் இது நாட்டுப் பிடி என்று
கருதலளவையாற் கண்டு என்றவாறு. அவ்வியானை பிடியானை என்பதும் அதுதானும்
நாட்டுப் பிடி என்பதும் அவர் தம் அத் தொழிற் பயிற்சி முதிர்வினை
யுணர்த்தும் கைகளை வீசி என்க. நிலமதிர வென்க. பிடியது - .அது :
பகுதிப்பொருளது. அற்றம் - சுவடு. படி- நிலம். அக்காற் சுவட்டின் மேலே
இரவில் மட்டும் அப் பாலைநிலத்தே நடக்கு மியல்புடைய பறவையடிச் சுவடுகள்
காணப்படுதலாலே என்க. இவ் வாராய்ச்சி அந்த மக்கள் சென்ற
காலத்தை யுணர்தற்கு ஏதுவாதல் மேலே யுணர்க. அக்காலத்தை அறித
லின்றியமை யாமையின் புரிந்தனர் நோக்கினர்
என்றவாறு.
|