உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
55. சவரர் புளிஞர் வளைந்தது
 
            நெருந னீடிரு ணீங்குநர் சுவடிவை
          அருமை யுடைத்தவர்த் தலைப்பட னமக்கென
          அடியுறி னடையு மம்புடை யெயினர்
          கடிகை வெள்ளிலுங் கள்ளி வற்றலும்
          வாடிய வுவலொடு நீடதர் பரப்பி
    85    உழைவயிற் றரியாது முழைவயி னொடுங்கிய
          ஆறலை யிளையரை யாண்மை யெள்ளி
          வேறினி நும்மொடு விளிகநுங் களவெனச்
          சேறல் வலியாச் செய்கை நோக்கி
 
               (இதுவுமது)

             80 - 88: நெருநல்.........வலியா

 
(பொழிப்புரை) இவ்வடிச் சுவடுகள் நேற்று இரவிருளிலே ஆறு சென்றோரின் அடிச்சுவடுகளாகும். ஆகவே யாம் இப்பொழுது இச்சுவடு பற்றிச் சென்றால் அவரை நாம் காண்டல் அரிதேயாகும் என்று அப்பாலை நிலத்திலே பிறர் அடிச்சுவடு காணப்படின் அதனைத் தொடர்ந்து சென்று அவரைப் பற்றிக் கொள்ளும் இயல்புடைய அம்பு பற்றிய கையையுடைய அவ் வேடர்கள் தந்தலைவன் ஆணையாலே, வழிப்போக்கரைக் கண்டுபிடித்து அலைக்கும் இளைஞர்கள் அவ்வழிப் போக்கர் வரவெதிர் பார்த்து வழிகளின் பக்கங்களிலே வெளிப்படத் தங்கா மல் விளாமரத் துண்டுகளையும் வற்றிய கள்ளி மரங்களையும் வாடிய சருகு களையும் நெடிய வழியிலே பரப்பி வைத்துத் தாம் அண்மையிலுள்ள குகை களிலே கரந்திருக்கின்றவரை நோக்கி, அவர் தம் மறத் தன்மையை இகழ்ந்து இனி நுங்குலத் தொழிலாகிய களவுத் தொழ`ில் நுங்களோடு ஒழிக! நீங்கள் வேடரல்லீர்! வேறாயினீர்! என்று வைது, அவ்வடிச் சுவட்டைத் தொடர்ந்து செல்லத் துணியாத என்க.
 
(விளக்கம்) எயினர் - பாலைநில மாக்கள். வெள்ளிற் கடிகை என மாறுக. வெள்ளில் - விளாமரம். கடிகை - துண்டு. அதர் - வழி. வெள்ளிற்றுண்டுகளையும் கள்ளி வற்றலையும் வழியிலே பரப்புதல் ஆறு செல்வோர் இடையூறுற்றுக் காலந் தாழ்த்தற் கும் சருகு பரப்புதல் அடியிடுங்கால் சருகுகளில் எழும் ஓசையாலே அவர் வரவறிதற்கும் என்க. முழையிற் கரத்தல் ஆறு செல்வோர் தம்மைக் கண்டு உய்ந்து போகாமைக் பொருட்டென்க. இந்த இளைஞர்கள் தலைவனாலே இதற்கென அமைக்கப்பட்டவர் என்க. உழை - பக்கம். உதயணன் முதலியோரைக் காணாது விடுத்தமையின் அவர் தம் ஆண்மை யைப் பழித்தனர் என்பது கருத்து. வேறு என்றது நீங்கள் வேடரல்லீர்! என்றவாறு. சினத்தால் நங்குலமென்னாது நுங்குலமென அவரை வேறு பிரித்தோதினர். சேறல் - மேற் செல்லுதல். வலியா - துணியாத.