உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
55. சவரர் புளிஞர் வளைந்தது
 
           பல்பனி பரந்த சில்லரி மழைக்கண்
          நச்சுயிர்ப் பளைஇய வச்ச நோக்கமொடு
          விம்முவன ணடுங்கும் பொம்ம லோதியை
    120    மாஞ்சினை யிளந்தளிர் மணிநிற மேனிக்
          காஞ்சன மாலாய் காவல் போற்றுமதி
          அப்பாற் புகுதரு மற்ற மின்மையின்
          இப்பால் வருவந ரின்னுயி ருண்கென
 
               (உதயணன் செயல்)

              117 - 123: பல்பனி.........உண்கென

 
(பொழிப்புரை) அவ்வேடரின் கொடுஞ்சொல் கண்டு உதயணன் பலவாகிய துளிகள் தோன்றிப் பரவிய சிலவாகிய செவ்வரியோடிய குளிர்ந்த கண்களிலே நஞ்சு போன்ற வெப்பமிக்க உயிர்ப்போடு கூடிய அச்சமிக்க பார்வையோடு விம்மி நடுங்கா நின்ற மிக்க கூந்தலை யுடைய வாசவதத்தையை மாவின் கொம்பிற் றோன்றும் இளந்தளிர் போன்ற அழகிய மேனியையுடைய காஞ்சனமாலாய்! நீ பாதுகாத்துக் கொள்வாயாக ! இவ்வேடர் நீயீர் இருக்கும் இடத்திற்கு வருவதற்கு வேறுபக்கங்களிலே வழி யில்லாமையால் யானிற்கும் இவ்வழியாலே தான் வருதல் வேண்டும். இவ்வழியே வருவோர்தம் இனிய உயிரை யான் உண்டு தீர்க்குவல் அஞ்சற்க! என்று கூறிப் பின்னர் என்க.
 
(விளக்கம்) உதயணன் ''காஞ்சனமாலாய் நீ பொம்மலோதியைக் காவல் போற்றுமதி யான் இப்பால் வருவநர் உயிர் உண்டு'' என்று கூறி, என்க. மணி - அழகு. மதி : முன்னிலையசை. அற்றம் - சோர் வுடைய இடம். வருவநர் - வருவோர் - உண்கு : தன்மை யொருமை வினைமுற்று உதயணன் ''காஞ்சனமாலாய் நீ பொம்மலோதியைக் காவல் போற்றுமதி யான் இப்பால் வருவநர் உயிர் உண்டு'' என்று கூறி, என்க. மணி - அழகு. மதி : முன்னிலையசை. அற்றம் - சோர்வுடைய இடம். வருவநர் - வருவோர் - உண்கு : தன்மை யொருமை வினைமுற்று