உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
55. சவரர் புளிஞர் வளைந்தது
 
           கைச்சிலை வளைத்துக் கணைநாண் கொளீஇ
    125    முற்றிய கோங்கின் முழுத்தாள் பொருந்தி
          ஒற்றுபு நோக்கு மொற்றை யாளன்
          வார்கணை செவியுற வாங்கி மற்றவர்
          ஆருயிர் வௌவவதன் றாண்முதல் பொருந்தி
          உடும்பெறிந் ததுபோற் கடுங்கணை முள்க
    130    விட்ட வேந்தன் விற்றொழில் கண்டும்
 
                    (இதுவுமது)

              124 - 130: கைச்சிலை.............கண்டும்

 
(பொழிப்புரை) தனது கையின் கண்ணதாகிய வில்லை வளைத்துக் கணையை நாணில் வைத்து முதிர்ந்ததொரு கோங்க மரத்தின் முழுமையான அடிப்பகுதியைச் சார்ந்து நின்றுகொண்டு அவ்வேடர் நிலையினை ஒற்றியுணர்ந்து கொண்டு தமியனாகிய அவ்வுதயணன் நெடிய கணை தன் செவியிற் பொருந்துந்துணையும் வில்லை வளைத்து அவ்வேடர்தம் அரிய உயிரைக் கவராநிற்பவும் மீண்டும் அக்கோங்க மரத்து அடியிலே பொருந்தி நின்று மீண்டும் மீண்டும் இவ்வாறே கடிய கணைகள் தம்முடலிலே பாய்ந்து முழுகும்படி உடும்பினை எய்வது போல எய்த உதயணனது விற்றொழிற்றிறமையைக் கண் கூடாக அவ் வேடர் கண்டுவைத்தும் என்க.
 
(விளக்கம்) கோங்க மரத்தின் அடிப்பகுதியில் மறைந்து நின்று அவர் நிற்றலை ஒருபக்கத்தே சாய்ந்து பார்த்தறிந்து எய்து என்க. மரத்தைச் சார்ந்துநிற்றல் அவர் எறிபடை தன்னைச் சாராமைப் பொருட்டென்க. எய்தபின் மீண்டும் அம்மரத்தின் மறைந்து என்றவாறு உடும்பினை எய்யுமளவு எளிமையாகவே ஒரு கணைக்கு ஒரு வேடனாக எய்து கொன்றென்பது கருத்து. முள்க - உடலிற் குளிப்ப.