உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
55. சவரர் புளிஞர் வளைந்தது
 
           கண்டுகை விடுதல் கரும மன்றென
          விண்டல ரிலவத் தண்டைசார்ந் தவனைக்
          கண்ட வேட்டுவர் தண்டாது நெருக்கி
          மையணி யிரும்பிடி வீழ மற்றுநீ
    135    உய்வலென் றெண்ணி யொளித்தனை போந்தனை
          எவ்வழிப் போதிநின் னின்னுயி ருண்குவம்
          யாரை நீயெமக் கறியக் கூறென
          வீர வெம்மொழி நீரல பயிற்றி
 
                (வேடர் உதயணனுக்குக் கூறுதல்)

                     131 - 138: கண்டு...........பயிற்சி

 
(பொழிப்புரை) இவ்வாறு வழிப்போக்கரைக் கண்டபின்னரும் அவரைக் கைகடக்க விட்டொழிதல் நம்மனோர்க்குத் தகுந்த செயலாகாது என்னும் மானக்குணத்தானே வெடித்து மலரும் மலரை யுடைய அவ்விலவ மரத்தருகே சென்று உதயணனை நன்கு கண்ட அந்த வேடர் ஒழியாமே மேலும் நெருங்கிவந்து 'ஏடா? நீ ஊர்ந்து வந்த கரிய அழகுடைய பெரிய பிடியானை இறந்து வீழவும், நீ மட்டும் தப்பி உய்வேன் என்று கருதி யாமறியாவண்ணம் மறைந்து ஈண்டு வந்தனையல்லையோ? இனி எவ்வாறு உய்ந்து போகுவை? நின் இனிய உயிரை யாங்கள் இப்பொழுதே குடிக்குவமடா ! யாங்கள் நின் உயிரைக் குடிப்பதற்கு முன்னரே நீ யார் என்பதனை எமக்கு விளங்கக் கூறுக!' என்று மறப்பண்புடைய வெவ்விய நீர்மை யற்றனவாகிய மொழிகளைப் பலகாலும் கூறி என்க.
 
(விளக்கம்) நம்மனோர் கருமம் அன்று என்க. விண்டு - வெடித்து. தண்டாது - ஒழியாமல். உண்குவம் : தன்மைப் பன்மை வினைமுற்று. யாரை என்புழி ஐகாரம் சாரியை. நீரல - நற்பண்பு இல்லாதன. பயிற்றுதல் - பலகாலும் கூறுதல்.