உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
55. சவரர் புளிஞர் வளைந்தது
 
           உடுவமை பகழி யொருங்குடன் றூவ
    140    விடுகணை விடலை வில்லின் விலக்கி
          வதிபயின் றடைந்த மறவரை யதிரக்
          கைவயிற் கடுங்கணை யொவ்வொன்று கொண்டவர்
          மெய்வயிற் கழிந்து வியனிலத் திங்க
          வீரருள் வீரன் விசைபெற விடுதலின்
    145    வீர வேட்டுவர் சார்த லாற்றார்
 
                (உதயணன் வேடரை நலிதல்)

                    139 - 145: உடு............ஆற்றார்

 
(பொழிப்புரை) உடுப் பொருந்திய அம்புகளை அனைவரும் ஒரு சேர உதயணன் மேலே எய்யாநிற்ப, அவ்வேடர் மேல் கணை விடா நின்ற உதயணன் தனது விற்றொழிற்றிறத்தாலே அவை தன் மேற் படாத படி விலக்கி மேலும் வழிமேற் றன்னைத் தொடர்ந்து வந்துசேர்ந்த அவ்வேடர்கள் அதிர்ச்சியுறுமாறு தனது கையிடத் தனவாகிய கடிய அம்புகளில் ஒவ்வொன்றினை எடுத்து அவருள் ஒவ்வொரு வேடன் உடலினும் ஊடுருவி அப்பாற் சென்று அகன்ற நிலத்திலே புகும்படியாக வீரருள்ளும் தலைசிறந்த வீரனாகிய அவ்வுதயணன் விரைவுறச் செலுத்துத லானே அவ்வேடர் தாமும் சிறந்த வீரமுடையராயிருந்தும் அவனை அணுக வியலாதவராய் என்க.
 
(விளக்கம்) உடு - நாணின்கட் பொருத்துதற்கு அம்பின் அடியிற்றடிப்பாகவுள்ள வோருறுப்பு. பகழி - அம்பு. விடலை : உதயணன். வில்லின் - விற்றொழிற்றிறத்தாலே. வதி - வழி. இங்க - தங்க. நிலத்திற் புகுந்து தங்க என்க. வீர வேட்டுவர் என்றார் அவரும் வீரராயிருந்தும் என்றற்கு.