உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           கணையொடு பிடித்த கைக்கோ லரணிப்
           புடையிடு பூளைப் பூப்புற மடுத்துப்
     20    பிசைந்த சிறுதீப் பெருக மூட்டி
           இசைந்த முளரி யெண்டிசைப் பக்கமும்
           வேனற் பேரழல் கானவர் கொளுத்தி்
           நோவக் கூறிச் சாவ தல்லது
           போதல் பொய்க்கு மினியெனப் போகார் 
     25    அரிமா வளைந்த நரிமாப் போல
           இகன்முனை வேட்டுவ ரிடுக்கண் செய்யப்
 
           (வேடர் தீமுட்டல்)
          18 - 26: கணை..........செய்ய
 
(பொழிப்புரை) அவ்வுபாயத்தைக் கேட்ட அவ்வேடர் அப்பொழுதே தம் மம்புகளோடு ஒரு சேரப் பற்றிய தீக்கடைகோலின் புறத்தே உலர்ந்து புடைத்த பூளைப்பூவாகிய பஞ்சினை வைத்துப் பிசைதலாலே தோன்றிய சிறுபொறியாகிய நெருப்பினைப் பெருக வளர்த்துப் பொருந்திய அந்நெருப்பினை அவ்விலவஞ்சோலையின் எட்டுத் திசைகளிடத்தும் வெப்பமிக்க பேரழலாகக் கொளுத்தி விட்டு, "இனி இவர்தாம் நாம் நோகும்படி தம்வாயான் வைது கொண்டு இறந்தொழிதலன்றி உய்ந்து போதல் இல்லையாகும்" என்று கூறிக்கொண்டு அவ்விடத்தினின்றும் போகாராய்ச் சிங்கத்தைச் சூழ்ந்து கொண்ட நரிகள் போன்று போரின்கண்ணே முனைகின்ற அவ்வேட்டுவர் இவ்வாறு இடையூறு செய்யா நிற்ப என்க.
 
(விளக்கம்) முன்னரே கையிற் கணைபற்றியிருத்தலாலே அரணியை அக்கணையொடு பிடித்தனர் என்க. புடையிடுதல் முதிர்ந்து பருத்தல். பிசைதல் - கடைதல். அரணி - தீக்கடைகோல். முளரி - தீ. வேனல் - வெப்பம். அரிமா - சிங்கம். நரிமா என்றது இகழிச்சி.