உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           புகைமிகு வெவ்வழல் பூம்பொழில் புதைப்பக்
           கான வெந்தீக் கடும்புகைப் பட்ட
           மானமர் பிணையின் மம்ம ரெய்தித்
     30    தளையவிழ் தாரோன் றனிமைக் கிரங்கிக்
           களைகண் காணாது கையறு துயரமொடு்
           பெய்வளைத் தோளி வெய்துயிர்த் தேங்கக்
 
           (வாசவதத்தை ஏங்கல்)
           27 - 32: புகை..........ஏங்க
 
(பொழிப்புரை) வேடர்களாலே இங்ஙனம் மூட்டப்பட்ட புகை மிக்க வெவ்விய நெருப்பு எழுந்து அவ்விலவம் பூம் பொழில் முழுதையும் மறையா நிற்றலாலே அகத்திருந்த வளையணிந்த கைகளையுடைய வாசவதத்தை காட்டுத்தீயாகிய வெவ்விய நெருப்பினது கடிய புகையினூடு அகப்பட்டுக் கொண்ட விரும்பத்தகுந்த பிணைமான் போன்று மயக்கமெய்திக் கட்டவிழ்ந்த மலர் மாலை யணிந்த தன் காதலனுடைய தனிமையை நினைந்து இரங்கித் தமது துயரத்தைப் போக்கி உய்யக் கொள்ளுவாரையும் காணப்பெறாமல் கையறு நிலையெய்திய பெருந் துன்பத்தோடே வெய்தாக உயிர்த்து ஏங்காநிற்ப வென்க.
 
(விளக்கம்) பொழில் - இலவம் பொழில் . கானவெந்தீ - காட்டுத்தீ. அமர் பிணைமான் என மாறுக. மம்மர் - மயக்கம். தாரோன் - உதயணன். களைகண் - ஆதாரமாவோர். கையறுதுயரம் - செயலறவிற்குக் காரணமான பெருந்துன்பம்.