உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           குலங்கெழு குருசில் கொடிக்கைம் மாறி்
           அலங்கிதழ்க் கோதையொ டவிழ்மூடி திருத்திக் 
     35     கலங்க லோம்பிக் காஞ்சன மாலாய்
           இலங்கிழை மாதரை யென்வழிப் படாதோர்
           பக்கங் கொண்டு படர்மதி யிப்பால்
           வில்லி னீக்கி வெள்ளிடை செய்தவர்
           அல்ல லுறீஇ யாருயி ருண்கெனக்
 
           (உதயணன் செயல்)
       33 - 39: குலங்கெழு..........உண்கென
 
(பொழிப்புரை) இந்நிலைகண்ட உயர்குலத் தோன்றலாகிய உதயணகுமரன் காஞ்சன மாலையை நோக்கிக் "காஞ்சனமாலாய்! இந்தக் குறுகிய இடத்தை விட்டு நீங்கி அசையாநின்ற மலர் மாலையுடனே அவிழாநின்ற கூந்தலையும் திருத்தி விளங்காநின்ற அணிகலனையுடைய வாசவதத்தையை மனங்கலங்காமே தேற்றி யான் செல்லும் வழியிலே வாராமல் மற்றொரு பக்கத்தே அழைத்துச் செல்வாயாக! இனி யான் எனது விற்போராலே ஈண்டு வரும் வேடரை அகற்றி ஈண்டு நமக்கு வேண்டிய இடை வெளியை யுண்டாக்கிப் பின்னர் அவ்வேடரை யெல்லாம் துயருறுத்தி அவர்தம் அரிய உயிரை யான் குடித்தொழிப்பேன் காண்!" என்று தேற்றுரை கூறி என்க.
 
(விளக்கம்) குலம் - உயர்குலம். குருசில்: உதயணன். கொடிக்கை - கொடிபோன்று நீண்டு குறுகிய இடம் என்க. மாதர்: வாசவதத்தை. தன்னைப் பின்பற்றிவரின் தனது விற்றொழிலுக்கு இடையூறாம் என்று என்வழி வாரற்க என்றான் என்க. மதி: முன்னிலையசை. வெள்ளிடை - இடைவெளி. அல்லலுறீஇ - துன்புறுத்தி. உண்கு - உண்பேன்.