உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
56. வென்றி யெய்தியது |
|
வலைநா ணிமிழ்ப்புண் வயமாப் போலக்
55 காட்சிக் கின்னா வாற்றல
னாகிப்
பேரமர் ஞாட்பினுட் பெருமுது
தந்தைதன்
வார்சிலைப் புரிநாண் வாளியி
னறுப்பத்
தேர்மிசைத் திரிந்த திறலோன்
போல
வீழ்தரு கடுங்கணை வில்லின் விலக்கி்
60 ஊழ்வினை துரப்ப வுயிர்மேற்
செல்லாது
தாழ்தரு தடக்கையுந் தாளுந்
தழீஇ வாயறை
போகிய வடுச்சேர்
யாக்கையன்
ஆழி நோன்றா ளண்ணலைக் கண்டே
|
|
(உதயணன்
நிலை) 54 -
63: வலை..........கண்டே்
|
|
(பொழிப்புரை) வலைக் கயிற்றாலே
கட்டுண்ட சிங்கம் போலே காண்டற்கும் இன்னாமை தரும் இந்நிலையைப்
பொறாதவனாகிப் பாரதப் பெரும் போர் நிகழ்ந்த களத்திலே தன்
பெரிய முதிய தந்தையாகிய ''கன்னன்'' தன்னூடைய நெடிய வில்லினது
முறுக்குடைய நாணை அம்பினாலே அறுத்தொழிப்பத் தன்மேல் வரும் மாற்றார்
படைக்கலத்தை நாணற்ற வில்லாலேயே தடுத்துக் கொண்டு அக்களத்திலே தேரிலே
திரிந்த ஆற்றலுடையோனாகிய ''அபிமன்'' போல இவ்வுதயணனும் தன்மேல் வந்து
வீழாநின்ற வேடர் விடும் கடிய கணைகளை நாணற்ற தனது வில்லாலேயே
விலக்குதலாலேயும், பின்னும் வாழ்தற்கியன்ற ஆகூழ் இடை நின்று
விலக்குதலானும், அவ்வேடர் அம்புகள் உதயணனுடைய உயிர்மேற் செல்லாமல்
முழந்தாளளவும் நீண்டு தூங்குமியல்புடைய அவன் பெரிய கைகளிடத்தும்,
கால்களிடத்தும் பட்டுக் கூர் மழுங்கி வீழாநிற்ப அவற்றாலுண்டான சிறுசிறு
புண்களையுடைய உடலையுடையவனாகிய ஆணைச் சக்கரத்தையும் வலிய முயற்சியையும்
உடைய அண்ணலாகிய அவ்வுதயணனைக் கண்டு என்க.
|
|
(விளக்கம்) வலைநாண் - வலைக்கயிறு, இமிழ்புண்ட - கட்டுண்ட. வயமா - சிங்கம்.
காட்சிக்கும் இன்னாமை தரும் இந்நிலையை என்க. ஆற்றலனாகி -
பொறாதவனாகி. பேரமர் என்றது - பாண்டவரும் துரியோதனன் முதலியோரும்
ஆற்றிய போரினை. பெருந்தந்தை மூவராகலின் அவருள்ளும் முதற்பெருந் தந்தை
யென்பார் பெருந்தந்தை யென்னாது பெருமுது தந்தை என்றார். அவன், கன்னன்
என்க. திறலோன் என்றது அபிமனை. இப்போரின்கண் உதயணன் இறவாமைக்குக்
காரணம் அவன் வில்லாலே விலக்கியதன்று ; அவனது ஆகூழே என்பார் ஊழ்வினை
துரப்ப என்றார். ?ஊழி பேரினும் உய்குநர் உய்வரே" என்றார் கம்பநாடரும்.
வடு ஈண்டுப் புண் என்பது படநின்றது. ஆழி - ஆணைச்சக்கரம்.
அண்ணல் - உதயணன். கண்டு என்பதற்கு எழுவாய் தளரியல்.
|