உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           தாழிருங் கூந்தற் றளிரிய னடுங்கித்
     65    தானணி பெருங்கலந் தன்வயிற் களைந்து
           கான வேட்டுவர் கைவயிற் கொடுவெனக்
           கவிரிதழ்ச் செவ்வாய்க் காஞ்சன மாலைகை
           அவிரிழை  நன்கல மமைவர நீட்டி
           அழியன்மி னீரென வழுவனண் மிழற்றிய
     70     காஞ்சனை நமைப்பொரு கானவர் தமக்குக்
            கொடுத்தில மாயிற் கொடுமைவிளை வுண்டெனக்
            கலக்க வுள்ளமொடு கடுஞ்சிலை கைத்தர
 
            (வாசவதத்தை செயல்)
            64 - 72: தாழிருங்..........கைத்தர்
 
(பொழிப்புரை) தாழ்ந்த கரிய கூந்தலையும் தளர்ந்த நடையினையும் உடைய வாசவதத்தை அச்சத்தான் மெய்ந் நடுங்கித் தான் அணிந்திருந்த பேரணிகலன்களையெல்லாந் தானே களைந்து "தோழீ! இவையிற்றை இக்காட்டக வேடர் கையிலே கொடுப்பாயாக!" என்று பணித்து முண்முருக்க மலர்போன்று சிவந்த வாயினையுடைய காஞ்சன மாலையினது கையிலே விளங்குகின்ற இழையாகிய அந்த நல்ல அணிகலன்களை அமைதியுண்டாகக் கொடுத்து, இதற்கு நீவிர் நெஞ்சழிதல் வேண்டா என்று கூற, அதுகேட்ட காஞ்சனமாலை அழுபவளாய் உதயணன்பாற் சென்று பெருமானே! நம்பால் போர் தொடுக்கின்ற இக்காட்டக வேடருக்கு அவர் பெரிதும் விரும்பு மிவற்றை யாம் கொடுத்திலே மாயின் பின்னர்க் கொடுமை மிக்க செயல்கள் நிகழ்தற்கு இடனுண்டாகும் என்று மிழற்றாநின்ற கலக்கமுடைய நெஞ்சத்தோடு அவ்வணிகலன்களைக் கடிய வில்லையுடைய அவ்வுதயணன் கையிற் கொடாநிற்பவென்க.,
 
(விளக்கம்) தாழ்தல் - தூங்குதல். தளரியல் - தளர்ந்த நடை: அன்மொழி; வாசவதத்தை என்க. அமை - அமைதி. அழிவனளாய் மிழற்ற என வாசவதத்தை செயலாக மிழற்றிய என்னும் செய்யிய என்னும் வாய்ப்பாட்டெச்சத்தைச் செய என்னெச் சமாக்கிக் கொள்ளலுமாம். கொடுமை விளைவு என்றது அவராற் கொலையுண்ணலை. அதனை வாயாற் கூறவும் அஞ்சி இங்ஙனம் கூறினள். கடுஞ்சிலை - அன்மொழித் தொகை; உதயணன்.