உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           நலத்தகு மாதர் நடுக்க நோக்கி்
           வலத்த னாகிய வத்தவ னகப்பட்
     75    டின்னுயிர் போகினு மின்ன னென்னாது
           மன்னுயிர் காவன் மனத்தி னெண்ணிக்
           குன்றச் சாரற் குறும்பினு ளுறையும்
           வன்றோ ளிளையீர் வந்துநீர் கேண்மின்
           பெருங்கலம் பெய்தியாம் பிடியொடும் போந்த
     80    அருங்கல வாணிக ரப்பிடி வீழ
           வருத்த மெல்லா மொருப்படுத் தொருவழி
           நெறிவயி னீக்கிக் குறிவயிற் புதைத்தனெம்
           கொள்குவி ராயிற் கொலைத்தொழி னீங்குமின்
           உள்வழி யப்பொருள் காட்டுக முய்த்தெனச்
 
            (உதயணன் செயல்)
          73 - 84: நலத்தகு..........உய்த்தென்
 
(பொழிப்புரை) நலமிக்க வாசவதத்தையும் காஞ்சனமாலையுமாகிய இருமகளிரின் மெய்ந்நடுக்கத்தை நோக்கி வெற்றிமறவனாகிய அவ்வுதயணன் இவ்வேடர்பால் யாம் அகப்பட்டுத் தம் மினிய உயிர்நீர்ப்பதாயினும் தன்னை இன்னான் என்று அறிவியாமலே ஏனைய உயிர்களைப் பாதுகாத்தல் வேண்டும் என்று தன் மனதிலே கருதி அவ்வேடர்களை நோக்கி "மலைச்சாரற் சிற்றரண்களிலே உறையாநின்ற வலிய தோளுடைய இளைய வேடரே! என்பால் வந்து யான் கூறுவதனைக் கேளுங்கோள்! யாங்கள் பேரணிகலங்களை நிரம்ப ஏற்றிக்கொண்டு ஒரு பிடியானையில் ஏறி ஊர்ந்து வந்த அருங்கல வணிகராவேம். யாமூர்ந்து வந்த அப்பிடியானை வழியிலே வீழ்ந்து இறந்துபட்டமையாலே யாம் கொணர்ந்த பேரணிகல முதலிய பொருள்களையெல்லாம் ஒருங்கு தொகுத்து வழியினின்றும் யாங்கள் குறிக்கொண்ட ஓரிடத்தே புதைத்து வைத்துள்ளேம். அவற்றை நீயிர் ஏற்றுகொள்ள நினைவீராயின் எம்மைக் கொல்லுந் தொழிலை மேற்கொள்ளா தொழிமின்! யாங்களே நுங்களை அவ்விடத்திற் செலுத்தி அப்பொருளை யெல்லாங் காட்டுவேங் காண்! என்று கூற என்க.
 
(விளக்கம்) வலத்தனாகிய வத்தவன் என்றது அவனியல்பு கருதி ஆசிரியர் இரங்கிக் கூறியபடியாம். வத்தவன் - உதயணன். இன்னன் - இன்னவன். குறும்பு - சிற்றரண். வன்றோளிளையர் என்று பாராட்டி விளித்தான் அவர் தன் மொழியை மகிழிந்து கேட்டற்கு. அவர் அவாவுவது பொருளேயாகலின் பெருங்கலம் பெய்து பிடியூர்ந்து வந்தேம் என்றான். பெருங்கலந்தானும் மிகுதியாகவுள்ளன என்பது தோன்ற யாங்கள் அருங்கல வாணிகர் என்றான். அவர் அவாவினைத் தூண்ட அருத்தமெல்லாம் ஒருப்படுத்து ஒருவழி புதைத்தனம் என்றான். யாங் காட்டினாலன்றி நும்மாற் காண்டற்கியலாது என்பது பட நெறிவயினீக்கிக் குறிவயின் புதைத்தேம் என்றான். எம்மைக் கொன்று விடுவீராயின் அவற்றை நீயிர் பெறுதல் அரிது என்பான். கொள்வீராயிற் கொலைத் தொழில் நீங்குமின் என்றான். அருத்தம் - பொருள். அணிகலனேயன்றி வேறு பொருளும் உள என்பது பட அருத்த மெல்லாம் என்றான். எங்களைக் கொல்லாது விடுவீரேல்யாமமே யாமே அவற்றை மனமுவந்து நுமக்குத் தருவேம் என்பான். அப்பொருள் உள்வழி உய்த்துக் காட்டுகம் என்றான்.