உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
     90   வத்தவர் கோமான் வாணிக ரித்திசைப்
           பெரும்பெயர்க் கிளவிப் பிரச்சோ தனனாட்
           டரும்பொருள் கொண்டியா மாற்றிடைப் போந்தனெம்
           மடப்பிடி வீழ விடர்ப்பட் டிருளிடைப்
           பொழில்வயிற் புதைத்த தொழிலினெம் யாமென
     95    முகைத்தார் மார்ப னுவப்பதை யுரைப்ப
 
          (உதயணன் கூற்று)
         90 - 95: வத்தவர்...............உரைப்ப
 
(பொழிப்புரை) அது கேட்ட உதயணன் "ஐயகேள் ! யாங்கள் வத்தவ மன்னனுடைய வாணிகராவேம். இந்தத் திசையிலே உள்ள பெரிய புகழ்ச் சொல்லையுடைய பிரச்சோதன மன்னனுடைய அவந்தி நாட்டிலே சென்று அந்நாட்டிற் கிடைக்கும் அரிய பொருள்களை வாங்கிக்கொண்டு யாங்கள் எங்கள் நாட்டிற்குச் செல்லற்கு இவ்வழியிலே வந்தேம். எம்முடைய இளம்பிடியானை இறந்தமையாலே பெரிதும் இடர்ப்பாடடைந்து யாங்கள் இருளின் கண் அவ்வரும் பொருளையெல்லாம் ஒரு சோலையின்கண்ணே நிலத்திற் புதைத்தேம் என்று அரும்பு மாலையையுடைய மார்பையுடைய அவ்வுதயணன் அவ்வேடன் விரும்புவதனையே விதந்து கூற என்க.
 
(விளக்கம்) வத்தவர் கோமான் வணிகர் என்றான்; தம்பால் பொருள் வளம் மிக்கிருக்கும் என்று அவ்வேடன் ஊகித்துக் கோடற்கு. வளமிக்க பிரச்சோதனன் நாட்டு அரும்பொருள் என்றான் ஆங்கு இவர் கொண்ட பொருள் சிறப்புடையனவாயிருக்கும் என்று அவ்வேடர் ஊகித்தற்கு. அவந்தி நாடிருக்கும் தென் மேற்றிசையைச் சுட்டி இத்திசை என்றான். இத்திசையாற்றிடை எனலுமாம். பொழில் என்றான் பின்னர்க் கூறுவதற்கு ஏற்கும்படி. மார்பன்: உதயணன். வேடர் உவப்பதை என்க. உவப்பது - பொருளுடைமை.