உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           நன்கை யாத்தது நன்று நொந்திவன்
           கவிகைக் கேலாது கட்டெனக் கலிழ்ந்தோள்
           அவிரழற் கானத் தருளி லாளர்
           அடுது மெனவே யமர்ப்பிணை போலத்
     115    தீயுறு தளிரின் மாநிற மழுங்க
           மாழை யொண்க ணூழூழ் மல்க
           மம்ம ருள்ளமொடு மடத்தை மாழ்க
 
         (வாசவதத்தை வருந்தல்)
            111 - 117: நன்மை..........மாழ்க
 
(பொழிப்புரை) முன்பு உதயணனுடைய அழகிய கைகளை அவ்வேடர் மேலாடையாலே கட்டியதற்கே "அந்தோ ! இரவலர்க்கு வழங்கும் பொருட்டுக் கவிந்த இவ்வள்ளற் பெருமான் கைக்குக் கட்டுண்ணல் ஒரு சிறிதும் பொருந்தாதே! என் செய்கோ!" என்று பெரிதும் நொந்து அழுதவளாகிய மடப்பமுடைய வாசவதத்தை விளங்குகின்ற அழலையுடைய காட்டிலே வாழும் அருளற்ற வேடர் இதனைக் கொல்வேம் என்று எழக்கண்ட விரும்புதலையுடையதொரு பெண்மான் போன்று தீயிலிட்ட இளந்தளிர் போன்று தன் மாந்தளிர் நிறம் மழுங்கவும் மதர்ப்புடைய ஒள்ளிய கண்களில் முறையே முறையே கண்ணீர் பெருகவும் துயருற்ற நெஞ்சத்தோடு மயங்கா நிற்ப வென்க.
 
(விளக்கம்) நன்று - பெரிதும். கவிதை - இடக் கவிந்த கை; வள்ளன்மையுடைய கை என்றவாறு. அருளிலார் இதனை அடுதும் என்றெழக் கண்ட பிணைபோல என்க. மாழை - அழகுமாம். ஊழ் ஊழ்நீர்மல்க என்க. மம்மர் - துன்பம். மாழ்க - மயங்க.