உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
     130   கையகப் பட்டோன் பொய்யுரைத் தனனெனின்
           உய்வகை யிலையிவ னுரைத்ததை யெல்லாம்
           செய்தும் யாமென வெவ்வினை யாளர்
           மையணி யானை தாங்கித் தழும்பிய
           கையாப் பொழித்துக் காத்தனர் நிற்ப
 
         (வேடர் செயல்)
         130 - 134: கையகப்..........நிற்ப
 
(பொழிப்புரை) உதயணன் வேண்டுகோள் கேட்ட அக்கொடுந் தொழிலுடைய வேடர் இவன் நம்கையினகப்பட்டவன். இவன் பொய்கூறுவானாயின் நம்மாற் கொல்லப்படுபவனே ஆவனல்லனோ! நம்மினின்றும் தப்பிப்போதற்கு வேறு வழியில்லையே; ஆதலால் இவன் வேண்டியதனை யெல்லாம் யாமும் செய்வேம் என்று தம் முட்பேசிக் கொண்டு மைபூசி அழகு செய்யப்பட்ட யானையை ஊர்ந்து அதன் புரோசைக் கயிற்றை இழுத்து நிறுத்துந் தொழிலாலே தழும்பேறிய உதயணனுடைய கைகளைக் கட்டுதல் தவிர்ந்து விழிப்புடன் அவனைக் காவல் செய்து நிற்க என்க.
 
(விளக்கம்) உய்வகை - தப்பிப் போகும்வழி. வெவ்வினையாளர் - வேடர். மை - அஞ்சனம். தாங்கி - தடுத்தலானே; கையாப்பு - கைகளைக் கட்டல்.