உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           விரைந்தனஞ் செல்கென வெம்படை தொகுத்து
           வேழமும் புரவியும் பண்ணுக விரைந்தெனத்
           தாழம் பறையொடு சங்கமணந் தியம்பக்
     190    கடல்கிளர்ந் ததுபோற் காற்படை துவன்றி
           அடலருங் குறும்பர்க் கறியப் போக்க
 
         (இடபகன் படையோடு உதயணன் நாடிவருதல்)
            187 - 192: விரைந்தனம்..........ஆகி்
 
(பொழிப்புரை) இச்செய்திகளைக் கேட்ட இடபகன் அங்ஙனமாயின் யாம் விரைந்து செல்லக் கடவேம் என்று விரைந்து தன் படைத்தலைவரை அழைத்து "நம்முடைய வெவ்விய நால்வகைப் படைகளையும் ஒருங்கே கூட்டி யானைகளையும் குதிரைகளையும் விரைந்து ஒப்பனை செய்யுங்கோள்" என்று பணித்தமையாலே, தாழம்பட்ட ஓசையையுடைய பறைகளோடே சங்கங்களும் விரவி முழங்காநிற்பக் கடல் பொங்கி யெழுந்தாற் போலே காலாட்படை முதலிய படைகள் எழுச்சியுற்று ஒருவழிவந்து செறியாநிற்ப, அது கண்ட இடபகன் பிறராலே கொல்லுதற்கரிய பேராற்றலுடைய தனது துணைப்படையாகிய குறும்பர் படையும் தம்மோடு வரும் பொருட்டு அக்குறும்பர் தலைவர்க்கு அறிவிக்கத் தூதரைவிடுத்துப் பின்னர் ஆங்குக் குழுமிய பெரும்படையோடு எழுச்சியுற்றவனாகி என்க.
 
(விளக்கம்) தாழம்பறை - தாழ்ந்த இசையை (மந்தவிசை)யுடைய பறை. காற்படை - காலாட்படை. துவன்றி - துவன்ற என்க. குறும்பர் குறுநிலமன்னராகிய வேடரும் அவர்குடிகளும் என்க.