உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
     235    வெந்திறல் வேட்டுவர் விரைந்தன ராகி
           அல்லி நறுந்தா ரண்ணலை நலிய
           ஒல்லா மறவ ரொலித்தன ரோடி
           வேகப் புள்ளமொடு விசைத்தன ரார்த்துக்
           கோடும் வயிருங் குழுமின துவைப்பவக்
     240   கருந்தொழி லாள ரிருந்தலை துமித்துப்
           பெருந்தகைக் கிழவனைப் பேரா மறவரை
           இடுக்கண் செயயவு மியல்பி லாளர்
           நடுக்க மெய்தக் குடைப்பெருந் தானை
 
             (படையாளர் செயல்)
        235 - 243: வெந்திறல்............எய்த
 
(பொழிப்புரை) அம்முதுவேடன் கூறிய நிமித்தத்தைக் கேட்டவுடன் வெவ்விய ஆற்றலுடைய அவ்வேடர்கள் மிகவும் விரைந்து அகவிதழாற் றொடுத்த நறிய மலர்மாலையினையுடைய உதயணகுமரனைத் துன்புறுத்தத் தொடங்க, அச்செயல்கண்டு பொறாத இடபகன் படைமறவர் பக்கத்தே மறைந்திருந்தவர் ஞெரேலெனப் போராவாரஞ் செய்தவராய் விரைந்து அவர்பாலோடி விசைமிக்க கொடுவாளைச் சுழற்றிப் பின்னரும் விரைந்து ஆரவாரித்துத் தமது ஊதுகொம்புகளாகிய கோடுகளையும் வயிர்களையும் ஒருங்கே ஊதி முழங்கா நிற்ப அது கேட்ட கொடிய தொழிலையுடைய அவ் வேடர், பெருந்தகைமையுடைய தலைவனாகிய உதயணனையாதல், மீளாத ஆற்றலுடைய இடபகன் படைவீரரையாதல் பெரிய தலையைத் துணித்துத் துன்பஞ் செய்யச் செவ்வியும், வலியு மில்லா தவராகி அப்படைக்கு அஞ்சி நடுங்காநிற்ப என்க.
 
(விளக்கம்) அல்லி - அகவிதழ். அண்ணல்: உதயணன். ஒல்லா - பொறாத மறவர் என்றது இடபகன் படைமறவரை. புள்ளம் - கொடு வாள் கோடு வயிர் என்பன துளைக்கருவிவகை. குழுமினவாகிய கோட்டையும் வயிரையும் துவைப்ப என்க. கருந்தொழில் - கொடுந் தொழில். கிழவன்: உதயணன். பேராமறவர் - போரிற் புறங்கொடாத மறவர். இயல்பு - செவ்வி ஆற்றல் முதலியன.