உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           தெம்முயிர் காமி னெனவே யாங்கவர்
           அடையார்க் கடந்த வுதயணன் மந்திரி
     250    இடபக னென்போ னெறிபடை தானிது
           கோளுலா யெழுமெனிற் கூற்றெனப் பரந்த
           நாளுலாப் புறுத்தும் வாள்வலி யுடைத்தே
           தெரிந்தனை நில்லா யாகி யெம்மொடு
           புரிந்தனை போது போதா யாயின்
     255   பிரிந்து காண்பிற ரருந்தலை துமிப்பவென்
           றார்வ வேட்டுவ ரண்ணற் குரைத்து
           வார்சிலை யம்பொடு வாங்கிக் கொள்கென
           வீர வேந்தற்கு விரைந்தவ ரீயா
 
           (வேடர் உதயணனுக்குக் கூறுதல்)
            248 - 258: ஆங்கவர்..........ஈயா
 
(பொழிப்புரை) அது கேட்ட அவ்வேடர்கள் உதயணனை நோக்கி "ஏடா! இப்படை யாருடையது தெரியுமா? தன் பகைவரை யெல்லாம் வென்று வாகைசூடிய உதயண வேந்தன் அமைச்சருள் வைத்து ஒருவனாகிய இடபகன் என்னும் சிற்றரசனுடைய கொல்லும் படைதான் இதுகண்டாய்! இப்படை பகைவரைக் கொல்லுதலை மேற்கொண்டு எழுச்சியுறுமாயின் எத்தகையோரையும் கூற்றுவன் போன்று வாழ்நாள் இல்லையாகப் பண்ணும் வாட்போர் வலிமையுடையது! இதனைத் தெரிந்துகொண்டு ஈண்டு நொடிப்பொழுதும் நில்லாமல் எம்மை விரும்பி எம்மோடு ஓடி வந்துவிடு. அங்ஙனம் வாராயாயின், எம்மைப் பிரிந்து மாற்றாராகிய அப்படைமறவர் உங்கள் பெறற்கரிய தலைகளைத் துணிப்பார்கள். அதனை அனுபவித்து அறிந்து கொள்வாயாக!" என்று அவ்வுதயணனுக்குக் கூறித் தம் முயிரின்கண் தீராத ஆர்வமுடைய அவ்வேடர் "உன்னுடைய நீண்ட வில்லையும் அம்பறாத்தூணியையும் பெற்றுக் கொள்க!" என்று கூறி வீரவேந்தனாகிய உதயணனுக்கு அவையிற்றைக் கொடுத்து விட்டு என்க.
 
(விளக்கம்) அவர் - அவ்வேடர். அடையார் - பகைவர் எறிபடை: வினைத்தொகை. கோள் - கொலை. நாட்டைக் கைப்பற்று தலை எனினுமாம். உலப்புறுக்கும் உலாப்புறுக்கும் என நீண்டது. புரிந்தனை - விரும்பி. தம்முயிர்மேல் ஆர்வமுடைய வேட்டுவர் என்க. அண்ணல்: உதயணன். ஈயா - ஈந்து.