உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           முற்பகற் செய்வினை பிற்பக லுறுநரிற்
     260    பார்வை நின்றும் பதுக்கையுட் கிடந்தும்
           போர்வைப் புல்லுட் பொதிந்தன ரொளித்தும்
           கழுக்குநிரை யிருந்துங் காலியிற் புரவி
           விழுக்குநிணம் பரிய விடுகணை விட்டும்
           கோலிய வல்விற் குமரரை மாட்டியும்
     265    வேலிய லாளரை வீழ நூறியும்
 
           (வேடர் செயல்)
          259 - 266: முற்பகல்..........வீழ
 
(பொழிப்புரை) அவ்வேடர்கள் "முற்பகலிலே பிறர்க்குச் செய்த தீவினையின் பயனை அற்றைநாட் பிற்பகலிலே செய்தவர் எய்துவர்" என்னும் ஆன்றோர் கூற்றிற்கு எடுத்துக்காட் டாவார் போன்று பெரிதும் இன்னலுற்ற அஞ்சி ஓடிப் பார்வை மிருகங்களின் இடையே புக்குமறைந்தும், பதுக்கையினிடையே பதுங்கிக் கிடந்தும், புற்களே தமக்குப் போர்வையாம்படி தம்மை மறைத்தும், கழுகுக் கூட்டங்களி னிடையே கழுகென இருந்தும் தம்மைத் தொடர்ந்து வருகின்ற இடபகன் படையில் காற்றுப் போன்று விரையும் குதிரைகளின் விழுக்கென்னும் நிணம் புறப்படத் தாம் விடுகின்ற அம்புகளை எய்தும், வளைத்த வலிய வில்லினையுடைய வீரர்களைக் கொன்று வீழ்த்தியும், வேல் கொண்டு போர்செய்யும் இயல்புடைய வீரரைக் கொன்றும், அவ்விடபகன் படைவீரர் தன்பால் எய்த அம்புபட இறந்து வீழ்ந்தவர் ஒழிய என்க.
 
(விளக்கம்) "பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா, பிற்பகற் றாமே வரும்" எனவரும் (319) திருக்குறளை நினைந்து ஆசிரியர் ''முற்பகற் செய்வினை பிற்பக லுறுநரின்'' என்றார். அம் மறைமொழிக்கு எடுத்துக்காட்டாக என்க இங்ஙனமே இளங்கோ வடிகளாரும் இக்குறளை "முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண்" எனப் பொன்போலப் போற்றிக் கூறுதலுணர்க (சிலப் - 21: 3 - 4). பார்வை - பார்வை மிருகம். பதுக்கை - ஆறுசெல்வோரைக் கொன்று அவருடலை மறைத்துக் குவித்த கற்குவியல். கழுகு, கழுக்கென்றாயிற்று. விழுக்கு நிணம்: இருபெயரொட்டு. நூறி - கொன்று. கணைவாளி - அலகையுடைய அம்பு.