உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
57. படை வீடு
 
            பெருமூ தாளரும் பெருங்கிளைச் சுற்றமும்
           திருமா தேவிக்குத் தெரிவன ரமைத்த
           வண்ண மகளிரொடு வைய முந்துறீஇ
     20    வந்தொருங் கீண்டிய பின்றைச் சயந்தி
           நாடுவண் டரற்றுங் கோடுயர் சாரல்
           இறைமகன் விட்டிட வுறையுண் முறைமையின்
           மறுகு முற்றமு மாண்பட வகுத்துக்
           தறிமிசைக் கொளீஇய செறிநூன் மாடமொடு
     25    நிரைநிரை கொண்ட நுரைபுரை திருநகர்
           பசும்பொற் புளகம் விசும்புபூத் ததுபோல்
           பரந்த பாடி நிரந்தவை தோன்றப்
 
        
     (இடபகன் ஏவலாளர் உதயணனுக்குப் படைவீடமைத்தல்)
            17 - 27 :  பெருமூதாளரும்..........தோன்ற
 
(பொழிப்புரை) பெரிய ஒழுக்கத்தையுடைய மெய்க் காப்பாளரும் நெருங்கிய உறவினராகிய சுற்றத்தாரும் கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தைக்கு ஒப்பனை செய்யும் தகுதியுடையவர் என்று ஆராய்ந்து அமைத்துக்கொண்ட வண்ணமகளிரோடே வாசவதத்தையின் பொருட்டுக் கொணரும் வண்டியை முன்னர்ச் செலுத்திக்கொண்டு இங்கு ஒருங்கே கூடியபின்னர், இடபகன் ஏவலாலே சயந்தி நகரத்தைச் சார்ந்திருக்கின்ற தேன் நாடிவரும் வண்டுகள் இசைபாடா நின்ற தொரு குவடுயர்ந்த மலைச்சாரலிலே உதயண வேந்தன் தன் உரிமையோடும் பரிவாரத்தோடும் இனிதே தங்கியிருத்தற் பொருட்டு அரசன் உறையுளாகிய அரண்மனையியற்றும் முறைமையினாலே நாற்பெரு வீதிகளும் தலைவாயின் முற்றமும் மாட்சிமையுண்டாக வகுத்து முளைகளின்மேல் கட்டப்பட்ட செறிந்த நூலானியன்ற படமாடங்கள் வரிசை வரிசையாகத் தன்னகத்தே கொண்ட நுரை போன்ற வெண்மையுடைய அழகிய அரண்மனை ஒன்றும் அதனைச் சூழ்ந்து வானமானது விண்மீன்களைப் பூத்தாற்போன்று பசிய பொன்னாலியன்ற கண்ணாடிகள் யாண்டும் சுடர்வீசி விளங்காநின்ற பரந்து நிரல்பட்ட படை வீடுகளும் எழாநிற்ப என்க.
 
(விளக்கம்) பெருமூதாளர் என்றது, பெரிய ஒழுக்கமுடைய முதுமையுடைய மெய்க்காப்பாளராகிய கஞ்சுகமாக்களை. திருமாதேவி : கோப்பெருந்தேவி ; ஈண்டு வாசவதத்தை. உதயணனாற் கைப்பற்றப்பட்ட துணையானே அவர்க்கு அவள் கோப்பெருந்தேவியே ஆயினமையின் இங்ஙனம் கூறினர். சயந்தி - வத்தவநாட்டிலமைந்த சிறந்த நகரங்களுள் ஒன்று ; உருமண்ணுவாவிற்குரியது.நாடுவண்டு : வினைத் தொகை. தேன்நாடும் வண்டென்க. கோடு - குவடு. விட்டிட - தங்கியிருக்க. உறையுள் - ஈண்டு அரசன் உறையுள்; அஃதாவது அரண்மனை. அரண்மனை அமைக்கும் முறையிலே அப் பாடிவீடுகள் அமைக்கப்பட்டன என்பது கருத்து. தறி-முளை. முளையடித்து அவற்றிற் கயிற்றாற் படாஅங்களைக் கட்டியே படவீட மைத்தல் மரபு. நூன்மாடம் - படாங்களானியன்ற மாடங்கள். மாடமொடு ; வேற்றுமை மயக்கம். மாடங்களை நிரைநிரை கொண்ட திரு நகரும்பாடி நிரந்தவையும் தோன்ற என்க. விசும்பு பூத்ததுபோல் புளகம் சுடரும் பாடி என்க. நிரந்தவை - நிரல்பட்டவை. விரைந்து இயற்றப்பட்டமை தோன்ற, தோன்ற என்றார். இடபகன் ஏவலாலே பணியாளர் இயற்றினார் என்பது கருத்து.