உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
57. படை வீடு
 
            பேணார்க் கடந்த பிரச்சோ தனன்மகள்
           பூணா ராகத்துப் பொங்கிள வனமுலை
     30    வள்ளிதழ்க் கோதை வாசவ தத்தைக்குப்
           பள்ளி மாடமும் பாற்பட வமைத்துப்
           பாவையு முற்றிலும் பூவையுங் குழலும்
           பைம்பொற் கவறும் பளிக்குமணி நாயும்
           சந்தனப் பலகையுஞ் சந்தப் பேழையும்
     35    சாந்தரை யம்மியுங் தேங்கட் காழகிற்
           புகைத்துளை யகலுஞ் சிகைத்தொழிற் சிக்கமும்
           கோதைச் செப்புங் கொடிக்கொட்ட டகரமும்
           கிளியு மயிலுந்....................................
           தெளிமொழிப் பூவையுஞ் செம்பொற் கரண்டமும்
 
        
     (வாசவதத்தைக்குரிய இடங்களும் பண்டங்களும் அமைத்தல்)
              28 - 39 - பேணார்..........கரண்டமும்
 
(பொழிப்புரை) பகைவரையெல்லாம் போர் செய்து வென்று வாகை சூடிய பிரச்சோதனை மன்னன் பெறலரும் மகளாகிய அணிகலன் பொருந்திய மார்பின்கட் பருத்த இளைமையுடைய அழகிய முலைகளையும் பெரிய இதழ்களையுடைய மலர்மாலையினையுமுடைய வாசவதத்தை நல்லாள் வதிதற்கேற்ற பள்ளி மாடத்தையும், அதன் பகுதியெல்லாமுண்டாக அவ்வரண்மனையிலே அமைத்திட்டு, அப்பெருந்தகைப் பெண்விளையாடற்குப் பாவைகளும், சிறுசுளகும், பூவையும், குழலும், பசிய பொன்னாலியன்ற சூதாடற் கருவியும், பளிக்கு நாயும், மணி நாயும், சந்தனமரத்தினியன்ற பலகையும், சந்தனமரப் பேழையும், சாந்தரைக்குமம்மியும், நெய்ப்புடைய கணுக்களையுடைய காழேறிய அகிலையிட்டுப் புகைக்கும் துளையமைந்த அகலும், மயிர்வினைக் கருவியாகிய சீப்பும், மாலையிட்டு வைக்குஞ் செப்பும், கொடிவேலையமைந்த கொட்டகரமும், கிளியும், மயிலும், தெளிந்தமொழி பேசுகின்ற நரகணவாய்ப் புள்ளும், செம்பொன் கரண்டமும்...... என்க.
 
(விளக்கம்) பூவை குழல் என்பனவும் விளையாட்டுக் கருவிகளே போலும், பின்னரும் தெளிமொழிப்பூவை கூறுதலின் (32) ஈண்டுக் கூறிய பூவை புள்ளன்று; ஆராய்க. கவறு முதலியன சூதாடுகருவிகள். பளிக்குநாயும் மணிநாயும் என்க சிக்கம் - சீப்பு, கொட்டகரம் - கொட்டம் என்னும் ஒருவகைப் பெட்டி. கரண்டம் - ஒருவகைக் கலம். சுண்ணக்கரண்டகம் என இக்காலத்து வழங்கப்படுதலறிக. 36 ஆம் அடியில் இரண்டு சீர்கள் அழிந்தொழிந்தன.