உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
57. படை வீடு
 
            அரைசியன் முறைமையி னண்ணற் சுமைந்த
     50    விரைபரி மாவும் வேழமுந் தேரும்
           தெள்ளொளித் திரள்காற் றிகழ்பொன் னல்கிவ
           வெள்ளிப் போர்வை யுள்ளொளிப் படலத்து
           வள்ளிக் கைவினை வனப்பமை கட்டிலும்
           விளங்குமணி முகட்டின் றுளங்குகதிர் நித்திலக்
     55    கோவைத் தரளங் கொட்டையொடு துயல்வரும்
           கொற்றக் குடையும் வெற்றி வேலும்
           கொடியுங் கவரியு மிடியுறழ் முரசும்
           சங்க படவமுங் கம்பல விதானமும்
           அங்காந் தியன்ற வழலுமிழ் பேழ்வாய்ச்
     60    சிங்கா சனமும் பொங்குபூந் தவிசும்
           பள்ளிப் பலவகைப் படுப்பவும் பிறவும்
           வள்ளிப் போர்வையும் வகைவகை யமைத்துத்
 
           (உதயணனுக் குரியன அமைத்தல்)
          49 - 62 :  அரைசியல்..........அமைத்து
 
(பொழிப்புரை) அரசியல்நடாஅத்தம்வேந்தர்க்கியன்ற முறைமையினாலே உதயண குமரனுக்கும், பொருந்திய விரைந்து செல்லும் குதிரைகளும், யானையும், தேரும் ஆகிய ஊர்திகளும், தெளிந்த ஒளியோடு திரட்சியுமுடைய கால்களையும் திகழாநின்ற பொற்பூக்கள் தங்கப்பெற்ற வெள்ளியாலாகிய போர்வையினையும், உள்ளே ஒளித்திரளையுமுடைய பூங்கொடித்தொழிலமைந்ததுமாகிய அழகமைந்த கட்டிலும், விளங்காநின்ற மணிகளானியன்ற முகட்டினையுடைய அசைகின்ற ஒளியுடைய நித்திலமாகிய முத்து மாலைகள் கடைமணியோடு தூங்கி அசையாநின்ற கொற்ற வெண் குடையும், வெற்றிதரும் வேலும், கொடியும், சாமரையும், இடிபோல முழுங்கும் முரசுமும், சங்கமும், படவமும், கம்பலமாகிய மேற்கட்டியும், வாயங்காந்த நிலையிலியற்றப்பட்ட தீயுமிழ்கின்ற பெரிய வாயையுடைய சிங்கஞ்சுமந்த அரசு கட்டிலும், மிக்க மலர்த் தவிசும், பள்ளியறையின்கண் பல்வேறுவகையுடைய படுத்தற் குரியனவும், பிறவும் கொடிகள் வரைந்த போர்வைகளும் வகை வகையாக அமைத்து வைத்தென்க.
 
(விளக்கம்) அரசற்குரியன என்று நூல்கள் கூறும் முறைமையினாலே என்க. இவற்றை,

"படையுங் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிறுந் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய"

எனவரும் தொல்காப்பியத்தினுங் (மரபியல் - 72.) காண்க. ஒளிப் படலம் - ஒளிக்கற்றை. வள்ளி - கொடி. முகடு - உச்சி. துளங்கு கதிர் நித்திலத்தரளக் கோவை என மாறுக. நித்திலத்தரளம்-நித்தில மாகிய தரளம் என்க. படவம் - ஓரிசைக்கருவி. விதானம்-மேற்கட்டி. பேழ்-பெருமை. வள்ளிப் போர்வை - பூங்கொடி ஓவியம் பொறித்த போர்வை.